தென்னிந்தியாவுக்கு தாராளம், வட இந்தியாவுக்கு பிம்பிலிக்கா பிலாபி; கண்ணாம்பூச்சி ஆடிய பருவ மழை
டெல்லி: தென்னிந்தியாவில் கனமழை கொட்டித் தீர்த்துள்ள நிலையில் வட இந்தியாவில் பல மாநிலங்களில் போதுமான அளவு மழை பெய்யவில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் பருவமழை பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.
ஆனால் தென்னிந்தியாவின் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் தேவையைவிட அதிக அளவு மழையை பெற்றுள்ளன.

தென்னிந்தியா
கடந்த சில நாட்களாக தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதன் காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பி
வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து கணிசமாக அதிகரித்தது. இதனால், அணைக்கு வரும் சுமார் 2 லட்சம் கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி ஆற்றையொட்டி இருந்த மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பற்றாக்குறை
நிலைமை தென்னிந்தியாவில் இவ்வாறு இருக்க, வட இந்தியா பருவமழை பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. உதாரணமாக, கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 15 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உத்தரப் பிரதேசத்தில், இயல்பைவிட 44 சதவிகிதம் குறைவாக பருவமழை பெய்துள்ளது. மேலும், பீகாரில் 39 சதவிகிதமும், மேற்கு வங்கத்தில் 20 சதவிகிதமும் இயல்பைவிட குறைவாக பருவமழை பெய்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை பொறுத்த அளவில் இக்காலகட்டத்தில் பெற வேண்டி பருவ மழையில் 64 சதவிகிதத்தை மட்டுமே மாநிலம் பெற்றுள்ளது.

கூடுதல்
டெல்லியை பொறுத்த அளவில் இந்த மழை பற்றாக்குறை 19 சதவிகிதமாக இருக்கிறது. ஒருபுறம் இவ்வாறு இருந்தாலும் மேற்குறிப்பிட்டதைப்போல மறுபுறத்தில் தென்னிந்தியா அதிக மழைப்பொழிவை பெற்றுள்ளது. இதில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. இக்காலகட்டங்களில் தமிழ்நாடு சுமார் 81 சதவிகிதம் அளவு இயல்பை விட அதிக மழையை பெற்றுள்ளது. தெலங்கானா 74 சதவிகிதமும் ராஜஸ்தான் 41 சதவிகிதமும் மழைப்பொழிவை பெற்றுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி
அதேபோல கர்நாடகா 34 சதவிகிதமும், குஜராத் 31 சதவிகிதமும், மகாராஷ்டிரா 30 சதவிகிதமும் மத்தியப் பிரதேசம் 16 சதவிகிதமும் இயல்பைவிட அதிக மழையை பெற்றுள்ளன. இதற்கு பஞ்சாபின் கங்காநகரில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் வரை வங்காள விரிகுடாவை நோக்கி செல்லும் ஒரு நீளமான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிதான் காரணம் என வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதன் இயல்பான நிலைக்கு தெற்காக இருக்கும்போது, மத்திய இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் அதிக மழைப்பொழிவை ஏற்படுத்தும்.

மாற்றம்
தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இயல்பை விட சற்று தெற்கே நகர்ந்து இருக்கிறது. இதனால் தென்னிந்தியா உள்ளிட்ட தெற்கு பகுதிகளில் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகில் உருவான அடுத்தடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், மேற்கு நோக்கி நகர்ந்ததால் அது தீவிரமடைந்து கனமழையை உருவாக்கி உள்ளதாகவும் தலைமை வானிலை ஆய்வாளர் மகேஷ் பலாவத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications