18 வயது நிரம்பிய இளம்பெண்.. திருமணமான ஆணுடன் வாழ உரிமை உண்டு! ம.பி உயர்நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: 18 வயது நிரம்பிய இளம்பெண் திருமணமான ஆணுடன் வாழ உரிமை உண்டு என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவு பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
இளம்பெண் ஒருவர், ஏற்கெனவே வேறு ஒருவருடன் திருமணமான ஆணுடன் தலைமறைவாகிவிட்டார் என்றும், அப்பெண்ணை மீட்டு தர கோரியும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை சமீபத்தில் நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன் மற்றும் பிரதீப் மிட்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க தொடங்கியது. விசாரணையில் ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்திருக்கின்றனர். அந்தப் பெண் வயது வந்தவர் என்பதால், அவர் யாருடன் வாழ விரும்புகிறாரோ அவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கு உண்டு என்றும், திருமணமான ஆணுடன் வாழ சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அந்தப் பெண், தான் வெளியேறிய ஆணுடன் வாழ விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அரசுத் தரப்பு, அந்த ஆண் திருமணமானவர் என்பதால், அப்பெண் தன் பெற்றோருடன் வாழ வேண்டும் என்று வாதிட்டது. மேலும், அந்த ஆண் தனது முதல் மனைவியை விட்டுவிட்டு விவாகரத்து செய்யப் போவதாகவும் அரசுத் தரப்பு குறிப்பிட்டது.
இந்த வழக்கில், அப்பெண்ணின் வயது 18-க்கு மேல் என்பதும், அவர் வயது வந்தவர் என்பதும் மறுக்க முடியாத உண்மை என்று நீதிமன்றம் முதலில் குறிப்பிட்டது. "அவருக்குத் தன் விருப்பப்படி முடிவெடுக்கும் உரிமை உள்ளது. அவர் யாருடன் வாழ விரும்புகிறாரோ, அவர் திருமணமானவராக இருந்தாலும், அவருடன் வாழ்வதைத் தடுக்கும் சட்டம் எதுவும் இல்லை" என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
அந்தப் பெண் அந்த ஆணை திருமணம் செய்துகொண்டால், அது பிணையில் வெளிவரக்கூடிய குற்றம் என்றும், முதல் மனைவி மட்டுமே கணவன் மீதும் அப்பெண் மீதும் இருதார மண வழக்குப்பதிவு செய்ய முடியும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. 'சமூகமரபு' சார்ந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் இந்த வழக்கில் நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.
அந்தப் பெண் தான் விரும்பியவருடன் தங்குவதற்கு உரிமை இருப்பதால், தன் பெற்றோருடன் தங்க மறுத்ததால், அந்தப் பெண் தன் விருப்பப்படி தேர்ந்தெடுத்த நபருடன் வாழப் போவதாக உறுதிமொழியைப் பெற்றுக்கொண்டு அப்பெண்ணை விடுவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. மேலும், அப்பெண் யாருடன் வாழ்கிறாரோ, அந்த ஆண் அப்பெண்ணின் துணையை ஏற்றுக்கொண்டதாக ஒரு ஒப்புதலைப் பெறவும் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கின் உத்தரவு சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இதுபோல ஒரு இளைஞன், திருமணமான பெண்ணுடன் சேர்ந்து வாழ விரும்பினால் சட்டம் அனுமதிக்குமா? என்றும் கேள்விகளை பலரும் எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications