அசாமில் முஸ்லிம் திருமணம் + விவாகரத்து பதிவு சட்டம் ரத்து செய்யப்படும்.. மாநில பாஜக அரசு முடிவு
கவுகாத்தி: அசாமில் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு சட்டம் 1935 - ஐ ரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக அம்மாநில பாஜக அரசு கூறியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அண்மையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட அதே மாதிரியான முடிவை அசாமும் எடுக்க உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பொது சிவில் சட்டம் கொண்டு வரும் மசோதா அம்மாநில சடமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நாட்டிலேயே பொது சிவில் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறியது. மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்தார்.

உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டு மூன்று வாரங்கள் கூட ஆகாத நிலையில் அசாம் பாஜக அரசும் தற்போது மேஜர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அசாமில் இஸ்லாமிய திருமண சட்டம் மற்றும் விவாகரத்து பதிவு சட்டத்தை ரத்து செய்ய மசோதா கொண்டு வர இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை அசாம் அமைச்சர் ஜெயந்த மல்லா புருவா வெளியிட்டார். இந்த மசோதவை கொண்டு வருவதற்கான முடிவு அமைச்சரவையில் எடுக்கப்பட்டதாகவும் கூறினார். அசாமில் தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வரும் 28 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்குள் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
அசாம் அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- இன்று மிக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அசாம் முஸ்லீம் திருமணம் & விவாகரத்து பதிவு சட்டம் 1935 ரத்து செய்யப்படும். இந்த சட்டத்தின் கீழ் எந்த முஸ்லீமும் திருமணமோ விவாகரத்தோ செய்ய முடியாது. இந்த விவகாரங்கள் அனைத்தும் திருமண சிறப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications