ஊரடங்கை கடைபிடிப்பதில் ஒத்துழைப்பு தருமாறு பிரதமர் மோடி வீடியோ வெளியீடு
டெல்லி: இன்று லாக்டவுனின் 10-வது நாள்- பொதுமக்கள் இணைந்து கொரோனாவுக்கு எதிரான போராட வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு, நாட்டு மக்களிடம் ஒரு வீடியோ செய்தியை பகிரப்போவதாக அறிவித்தார். "நாளை காலை 9 மணிக்கு, இந்தியர்களுடன் ஒரு சிறிய வீடியோ செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி நேற்று இந்தியில் ட்வீட் செய்திருந்தார். அதன்படி இன்று வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அவரது செய்தி கொரோனா வைரஸ் பிரச்சினை பற்றியே உள்ளது. மோடி தனது வீடியோ உரையில், " இன்று லாக்டவுனின் 10-வது நாள்- பொதுமக்கள் இணைந்து கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம்
மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும். மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி. வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது. வரும் 5ம் தேதி இரவு 9 மணிக்கு, வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்-
கொரோனா விழிப்புணர்வு.. ஏப்ரல் 5 அன்று 9 நிமிடம் விளக்குகளை அணியுங்கள்.. பிரதமர் மோடி கோரிக்கை
இந்தியாவில் கொரோனா ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறியதிலிருந்து பிரதமர் இரண்டு முறை நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். மார்ச் 19ம் தேதி, தனது முதல் உரையில், அவர் ஒரு நாள் சுய ஊரடங்கு உத்தரவுக்கு அழைப்பு விடுத்தார். மார்ச் 24ம் தேதி தனது, இரண்டாவது உரையில், கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த தேசிய லாக்டவுனை அறிவித்தார். சமூக விலகலை பின்பற்றவும், லாக்டவுன் விதிகளை கண்டிப்பாக பின்பற்றவும் குடிமக்களை வலியுறுத்தி அவர் தொடர்ந்து ட்வீட் செய்தார். வியாழக்கிழமை பிற்பகல் முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். லாக்டவுன் முடிவடைந்ததும், மக்களை கட்டுப்படுத்துவது எப்படி என்பது பற்றிய பொதுவான திட்டத்தை அவர், முதல்வர்களிடம் கேட்டறிந்தார்.