கொரோனா 2-வது அலை.. போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்புங்கள்.. விவசாயிகளுக்கு, மத்திய அரசு வேண்டுகோள்
டெல்லி: கொரோனா 2-வது அலை வீசி வருவதால் டெல்லியில் போராடும் விவசாயிகள், போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் சுமார் 130 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பேசுவார்த்தையில் பயன் இல்லை
கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர் ஆகியவற்றை தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.
கொரோனா 2-வது அலை
வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள். தற்போது இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை வீசி வருகிறது. டெல்லியிலும் தினமும் 7,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
பேச்சுவார்த்தைக்கு தயார்
இந்த நிலையில் கொரோனா 2-வது அலை வீசி வருவதால் டெல்லியில் போராடும் விவசாயிகள், போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். இது தொடர்பாக நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ' பல விவசாய சங்கங்கள், பொருளாதார வல்லுநர்கள் விவசாய மசோதாக்களை ஆதரிக்கின்றனர், ஆனால் சில விவசாயிகள் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது, மேலும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
வீட்டுக்கு திரும்பி செல்லுங்கள்
வேளாண் சட்டத்தின் சிக்கலான பகுதிகளைப் பற்றி விவாதிக்க, அவற்றில் மாற்றங்களைச் செய்ய நாங்கள் முன்வந்தோம். விவசாய சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கான காரணமும் கூறவில்லை. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு குழந்தைகள் மற்றும் வயதானவர்களை வீட்டிற்கு திரும்பிச் செல்லுமாறு விவசாய தொழிற்சங்கத் தலைவர்களை நான் பலமுறை கேட்டுக்கொண்டேன். இப்போது 2-வது அலை தொடங்கியுள்ளது. விவசாயிகள் மற்றும் அவர்களின் தொழிற்சங்கங்கள் கொரோனா நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் மற்றும் எங்களுடன் கலந்துரையாட வேண்டும் என்று நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.