சித்து போட்ட ஒற்றை ட்வீட்! பரபரக்கும் காங்கிரஸ்.. பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் யார்?
டெல்லி: பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் குறித்து அக்கட்சியின் தலைமை இன்று அறிவிக்க உள்ள நிலையில், நவ்ஜோத் சிங் சித்து இது தொடர்பாக முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது,
இதில் மொத்தம் 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்.20ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது.

பஞ்சாப்
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பஞ்சாபில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. எனவே, அங்கு மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், இதுவரை அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் அக்கட்சிக்குச் சாதகமாக இல்லை. முதலில் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங்கிற்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் உச்சமடைய, அமரிந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சரண்ஜித் சிங் சன்னி கொண்டு வரப்பட்டார். பஞ்சாபில் சுமார் 30% தலித்துகள் உள்ளதால் அதே சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சித்து
சரண்ஜித் சிங் முதலில் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆதரவாளர் என்றே அறியப்பட்டார். இருப்பினும், சித்து அவருடனும் கூட மோதல் போக்கையே கையாண்டு வந்தார். முதல்வர் வேட்பாளர் குறித்து சித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வந்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. எளிதாக வெல்ல வேண்டிய பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் வலியச் சென்று தோல்வியைத் தழுவுவதாகப் பலரும் சாடினர்.

சித்து ட்வீட்
இந்த சூழலில் தான் முதல்வர் வேட்பாளர் குறித்து சித்து முக்கிய கருத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "முடிவெடுக்காமல் எந்தவொரு விஷயத்தையும் சாதிக்க முடியாது. பஞ்சாப் விவகாரத்தைத் தெளிவுபடுத்த உள்ள ராகுல்ஜியை வரவேற்கிறோம். அனைவரும் அவருடைய முடிவுக்குக் கட்டுப்படுவார்கள்!!!" என்று ட்வீட் செய்துள்ளார்.

பரபரக்கும் காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக இன்று நடைபெறும் டிஜிட்டல் பேரணியில் ராகுல் காந்தி அறிவிக்க உள்ள நிலையில், சித்துவின் இந்த ட்வீட் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. முதல்வர் பதவியைச் சுழற்சி முறையில் காங்கிரஸ் தரும் எனத் தகவல் வெளியான நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது. சரண்ஜித் சிங்கையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங். தலைமை முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், சித்து இப்படி ட்வீட் செய்துள்ளார்.

முரண்
அதேநேரம் சித்து முதல்வர் வேட்பாளர் குறித்துத் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான கருத்துகளையே தெரிவித்து வருகிறார். முதல்வர் யார் என்பதைப் பஞ்சாப் மக்கள் தான் முடிவு செய்வார்கள். முதல்வர் யார் என்பதைக் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யாது என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார். அதன் பின்னர் மீண்டும் கட்சித் தலைமை முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் என்று அவர் மாற்றிப் பேசினார்.

கடும் போட்டி
பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இதைத் தாண்டி முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரசுடன் இணைந்து பாஜக தேர்தலை எதிர்கொள்கிறது. அதேபோல அகாலி தளம் மற்றும் பகுஜன் சமாஜ் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில் தற்போது வரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவும் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications