டெல்லியில் ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.. சிக்கிய நைஜீரியா கும்பல்!
டெல்லி: டெல்லியில் ரூ.27.4 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் மற்றும் கொக்கைன் போதைப் பொருட்களைக் கைமாற்றிய நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரபல ஹோட்டல் மற்றும் வாடகை குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (NCB) மற்றும் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு கும்பல் டெல்லியில் இன்று பிடிபட்டது.

ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் தங்கி இருந்த வாடகை குடியிருப்பில் போதைப்பொருள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர், நைஜீரியாவின் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த 4 ஆப்பிரிக்க நாட்டவர்கள் உட்பட அங்கிருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து எம்.டி.எம்.ஏ போதைப்பொருளைத் தவிர, உயர்தர கிரிஸ்டல் மெத் மற்றும் ஆப்கானிஸ்தான் ஹெராயின் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. முக்கிய போதைப்பொருள் நெட்வொர்க்கை பிடித்ததற்காக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் டெல்லி காவல்துறையினரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டி உள்ளார்.
"போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான எங்கள் இடைவிடாத வேட்டை தொடர்கிறது. மோடி அரசாங்கம் போதைப்பொருட்களுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்டது. டெல்லி-என்சிஆரில் ஒரு பெரிய போதைப்பொருள் நெட்வொர்க்கின் திட்டம் முறியடிக்கப்பட்டது. என்சிபி மற்றும் டெல்லி காவல்துறையினர் அந்தக் கும்பலை கையும் களவுமாகப் பிடித்து ₹27.4 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன், எம்டிஎம்ஏ மற்றும் கோகோயின் ஆகியவற்றை மீட்டு ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர். இந்த பெரிய நடவடிக்கைக்காக என்சிபி மற்றும் டெல்லி காவல்துறையை நான் பாராட்டுகிறேன்," என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில், 560 கிலோ கொக்கைன் மற்றும் 40 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருட்கள் டெல்லியின் மஹிபலூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் இருந்து கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.5,620 கோடி . இது டெல்லியின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கைகளில் ஒன்றாகும். அடுத்த சில நாட்களுக்குப் பிறகு, மற்றொரு போதைப்பொருள் கும்பலிடம் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள 200 கிலோ கொக்கைன் மீட்கப்பட்டது.












Click it and Unblock the Notifications