குடும்பத்தினருக்கு தெரியாமல் உடலை எரித்தது ஏன்... உத்தரப் பிரதேச டிஜிபிக்கு பெண்கள் கமிஷன் நோட்டீஸ்!
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இறந்த பின்னர் அவரது உடலை குடும்பத்தினர் இல்லாமல் எரித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு அந்த மாநில டிஜிபிக்கு தேசிய பெண்கள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கான விளக்க அறிக்கையை விரைவில் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று இந்தக் கமிஷன் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

வயல்வெளி
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உயர் வகுப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தார். கடந்த 14ஆம் தேதி வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, இவரை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

சப்தர்ஜங்
உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு இருந்த நிலையில், முதலில் அலிகார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து டெல்லியில் இருக்கும் சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

போலீசார்
அவரது உடலை குடும்பத்தினரிடம் கொடுக்காமல் போலீசார் நள்ளிரவில் எரித்தனர். இது தேசிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில், இந்தப் பெண் கடுமையாக தாக்கப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது.

ரத்தம்
பிரேத அறிக்கையில், ''முதுகு தண்டுவடத்தில் சி6ல் முறிவு ஏற்பட்டு உள்ளது. அந்த இடத்தில் ரத்தமும் வெளிப்பட்டுள்ளது. அவரது கழுத்தும் நெறிக்கப்பட்டுள்ளது, இதற்கான தழும்புகள் அவரது கழுத்தில் ஏற்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

நோட்டீஸ்
இந்த நிலையில்தான், அவரது குடும்பத்தினருக்கே தெரியாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை எரித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு உத்தரப் பிரதேச மாநில டிஜிபிக்கு தேசிய பெண்கள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications