நீட் முதுநிலை தேர்வு தொடங்கியது.. தேர்வர்களுக்கு கட்டுப்பாடுகள்.. என்னென்ன? முழு விவரம்
டெல்லி: மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் முதுநிலை தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. இரண்டு ஷிப்டுகளாக நடக்கும் தேர்வில் முதல் ஷிப்ட் தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் நடைபெறும் இந்த தேர்வை எழுத மருத்துவர்கள் சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 25 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நீட் தேர்வினால் ஏழை எளிய கிராமப்புற மாணவ மாணவிகளின் மருத்துவ கனவு சிதைந்து போகிறது என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை உலுக்கி வருகிறது.

ஆனாலும் தமிழக அரசின் இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்ப்பது இல்லை. இதுவரை இல்லாத அளவுக்கு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. தவறுகள் நடந்ததை மத்திய அரசே ஒப்புக் கொண்டது. இது ஒருபக்கம் என்றால் முதுநிலை நீட் தேர்விலும் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டன.
மருத்துவ படிப்புகளுக்காக நீட் முதுநிலைத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்வுக்காக 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது அம்பலமானதால், இந்த முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது.
பின்னர் இந்த தேர்வு ஆகஸ்டு 11-ம் தேதி (இன்று) காலை மற்றும் பிற்பகல் என 2 பிரிவுகளாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் தேர்வு மையங்களும் ஒதுக்கப்பட்டன. இதில் பலருக்கும் நீண்ட தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக ஒரு மாநிலத்தை சேர்ந்த மாணவருக்கு மற்றொரு மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்து உள்ளது.
எனவே இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சில மாணவர்கள் வழக்கு தொடர்ந்து உள்ளனர். எனினும், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, தமிழக தேர்வர்களில் 75 சதவீதத்தினருக்கு தமிழகத்தில் அவர்கள் கேட்ட தேர்வு மையங்களில் ஒன்றை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் மறு ஒதுக்கீடு செய்தது. எனினும், 25 சதவீத தேர்வர்களுக்கு 1,000 கிமீ தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தநிலையில், நீட் முதுநிலை தேர்வு இன்று தொடங்கியது. இரண்டு ஷிப்டுகளாக தேர்வு நடைபெறுகிறது. முதல் ஷிப்ட் தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கியது. மதியம் 12.30 மணி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. இரண்டாவது ஷிப்ட் தேர்வு பிற்பகல் 3.30 முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். கணினி வழி தேர்வாக இந்த தேர்வு நடைபெறுகிறது.
இந்த தேர்வை எழுத தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஹால்டிக்கெட், புகைப்படத்துடன் கூடிய ஐடிகார்டு, என்.எம்.சி பதிவு நகல் ஆகியவற்றை மட்டுமே எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்படும். முதல் ஷிப்ட் தேர்வுக்கு 8.30 மணிக்கு முன்பாக தேர்வர்கள் சென்றுவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிளுக்கு அனுமதி கிடையாது. உணவுபொருட்களையும் எடுத்து செல்லக் கூடாது.












Click it and Unblock the Notifications