பயிற்சி மருத்துவர்கள் மீது தடியடி.. நாளை மருத்துவர்கள் ஸ்டிரைக்.. ஸ்தம்பிக்கும் கொரோனா சிகிச்சை?
டெல்லி: நீட் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சலிங்கை உடனடியாக நடத்தக் கோரி டெல்லியில் பயிற்சி மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதை கண்டித்து நாளை மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா சிகிச்சைகள் ஸ்தம்பிக்கும் அபாயம் இருப்பதாக தெரிகிறது.
நீட் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த கோரி தலைநகர் டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீஸார் தெரிவித்தனர்.
எனினும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் வாகனங்கள் சேதமடைந்ததாக சொல்லப்படுகிறது.

7 போலீஸார் காயம்
இந்த நிலையில் ஐடிஓ பகுதியில் ஏற்பட்ட மோதலில் சிக்கி 7 போலீஸார் காயமடைந்ததால் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. போராட்டம் நடத்திய பயிற்சி மருத்துவர்கள் மீது பணியில் இருந்த காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொதுச் சொத்துகளை
சூறையாடியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மருத்துவர்கள் கைது
இது தொடர்பாக பலர் கைதும் செய்துள்ளனர். இந்த நிலையில் போலீஸாரின் தடியடியை கண்டித்து புதுவையில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் இரவு முழுவதும் நீடித்தது. இந்த தடியடிக்கு அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு, டெல்லி எம்ய்ஸ் மருத்துவர்கள் சங்கம், குடியுரிமை மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் கோரிக்கை
கைது செய்யப்பட்டுள்ள பயிற்சி மருத்துவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அரசும் போலீஸும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்யாவிட்டால் அவசர சிகிச்சை தவிர அனைத்து சிகிச்சைகளும் நிறுத்தப்படும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வேலைநிறுத்தம்
மேலும் போலீஸ் தடியடியை கண்டித்து நாளை காலை 8 மணி முதல் அனைத்து மருத்துவ சேவைகளையும் நிறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதால் அகில இந்திய மருத்துவர் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. போலீஸார்- போராட்டக்காரர்கள் மோதல் வீடியோவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் பிரியங்கா காந்தியும் தங்களது ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். முன்கள பணியாளர்களான தங்களை அரசும் போலீஸும் இது போல் நடத்துவது வேதனையாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஓமிக்ரான் தலைநகர் டெல்லியில் அதிகளவில் பரவி வரும் நிலையில் மருத்துவர்கள் போராட்டத்தால் கொரோனா, ஓமிக்ரான் சிகிச்சைகள் பாதிக்கப்படும் என அச்சம் எழுந்துள்ளது. மருத்துவர்களின் போராட்டம் டிவிட்டரிலும் டிரென்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications