முதுநிலை நீட் தேர்வு.. அனைத்து பிரிவினருக்கும் கட் ஆப் மதிப்பெண் குறைப்பு!
டெல்லி: அனைத்து பிரிவினருக்கும் முதுநிலை நீட் தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண் குறைக்கப்படுவதாகத் தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வு மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. இளநிலை படிப்புகளுக்கும் முதுநிலை படிப்புகளுக்கும் தனித்தனியாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் கட் ஆஃப் மதிப்பெண் 15% குறைக்கப்படுவதாகத் தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்திடம் கலந்தாலோசித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தேசிய தேர்வு வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், "பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, முதுநிலை நீட் தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் கட்-ஆஃப் 15 சதவிகிதம் குறைக்கப்படுகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சரின் ஒப்புதல் உடனே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொதுப்பிரிவினருக்கு 35% ஆகவும், பொது மாற்றுத் திறனாளிகளுக்கு 30% ஆகவும், ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 25% ஆகவும் கட் - ஆஃப் குறைக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட கட் - ஆஃப் அடிப்படையில் புதிய தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட்டு, புதிய பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும்" எனக் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications