"இந்திய விவகாரங்களில் வெளிநாடுகளை தலையிட ஒருபோதும் கூறியதில்லை"- ராகுல் காந்தி
டெல்லி: இந்தியாவின் பிரச்சினையை இந்தியாவிலேயே தீர்க்க வேண்டும் என லண்டனில் பேசினேன். இந்திய விவகாரங்களில் வெளிநாடுகளை தலையிட ஒருபோதும் கூறியதில்லை. நான் உண்மையை மட்டுமே பேசினேன். என்னை தகுதி நீக்கம் செய்து கைது செய்தாலும் தொடர்ந்து உண்மையை பேசுவேன் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
கடந்த 2019- ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக சூரத் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி பேட்டி
ராகுல் காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் முறையாக செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது இந்திய விவகாரங்களில் வெளிநாடுகளை தலையிட ஒருபோதும் கூறியதில்லை என்று கூறினார். ராகுல் காந்தி கூறியதாவது:- இந்தியாவின் பிரச்சினையை இந்தியாவிலேயே தீர்க்க வேண்டும் என லண்டனில் பேசினேன். இந்திய விவகாரங்களில் வெளிநாடுகளை தலையிட ஒருபோதும் கூறியதில்லை. நான் உண்மையை மட்டுமே பேசினேன்.

பிரதமர் மோடி பயப்படுகிறார்
என்னை தகுதி நீக்கம் செய்து கைது செய்தாலும் தொடர்ந்து உண்மையை பேசுவேன். இந்த தேசம் எனக்கு அனைத்தையும் கொடுத்துள்ளது. எனவே நான் இந்த தேசத்திற்காக அனைத்தையும் செய்வேன். தகுதி நீக்கத்தின் மூலம் எனது குரலை ஒடுக்கிவிட முடியாது. நான் பேசுவதை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார். பிரதமர் கண்களில் நான் பயத்தை பார்த்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

லண்டனில் ராகுல் காந்தி பேச்சு
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சமீபத்தில் லண்டன் சென்று இருந்தார். லண்டனில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசிய ராகுல் காந்தி, "இந்திய ஜனநாயகம் அழுத்தம் மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் ஜனநாயக கட்டமைப்பிற்கு தேவையான நாடாளுமன்றம், சுதந்திரமான ஊடகங்கள், நீதித்துறை ஆகியவை ஒன்றிணைவதற்கான எண்ணங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. ஊடகங்கள் மீதும், சிறுபான்மையினர் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்தும் நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியும். இதன் மூலம் நீங்கள் அங்கு என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்" என்று பேசியிருந்தார்.

வெளிநாடுகளின் தலையீட்டை விரும்புகிறாரா?
ராகுல் காந்தியின் இந்த பேச்சை கடுமையாக விமர்சித்து இருந்த பாஜக, ராகுல் காந்தி வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை அவதூறாக பேசுவதாகவும் வெளிநாடுகளின் தலையீட்டை விரும்புகிறாரா? என்றும் கேள்வி எழுப்பியது. ஆனால், ராகுல் காந்தி தரப்பில் பாஜகவின் இத்தகைய குற்றாச்சாட்டுக்கள் நிராகரித்து பதில் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தான் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி "இந்திய விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் கோரவில்லை" என்று பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications