நாடாளுமன்றத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட திமுக எம்பி எம்.எம். அப்துல்லா.. திரிணாமுல் காங்கிரஸ் ஆவேசம்!
டெல்லி: நாடாளுமன்றத்துக்குள் சென்ற திமுக ராஜ்யசபா எம்பி எம்.எம்.அப்துல்லா தொழிலகப் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நாடாளுமன்ற வளாகம் மோடி, அமித்ஷாவின் தனிப்பட்ட சொத்தா? என இச்சம்பவத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
திமுகவின் ராஜ்யசபா எம்பி எம்.எம்.அப்துல்லா நேற்று நாடாளுமன்றம் சென்றார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த CISF என்கிற மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் எம்.எம்.அப்துல்லா எம்பியை தடுத்து நிறுத்தினர். அத்துடன் என்ன காரணத்துக்காக நாடாளுமன்றத்துக்குள் செல்கிறீர்கள்? என விசாரணை நடத்தி இருக்கின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு எம்.எம்.அப்துல்லா எம்பி கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், நாடாளுமன்றதுக்கு நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு தாம் சென்றதாகவும் தம்மை மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். அத்துடன் எதற்காக நாடாளுமன்றம் செல்கிறீர்கள் என விளக்கம் தந்தாக வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தினர். தமிழ்நாட்டு பிரதி ஒருவரிடம் நாடாளுமன்றப் பாதுகாவலர்கள் இப்படி மோசமாக நடந்தது இல்லை. மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் பணிக்கு வந்த நிலையில்தான் இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்படி மோசமாக நடந்து கொண்ட மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எம்.அப்துல்லா எம்பி தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்கு தனி பாதுகாவலர்கள் இருந்தனர். கடந்த மே மாதம் நாடாளுமன்ற வளாகப் பணியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். அன்று முதலே ஏம்பிக்களுக்கும் தொழிலகப் பாதுகாப்பு படையினருக்கும் இடையே சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
நாடாளுமன்ற வளாகத்தில் திமுகவின் எம்.எம். அப்துல்ல்லா எம்பி தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்திய நாடாளுமன்றம் ஒன்றும் மோடி- அமித்ஷாவின் சொந்த சொத்து இல்லை. நாடாளுமன்றத்தின் ராஜ்யசபா உறுப்பினர் நாடாளுமன்றத்துக்குள் செல்வதை ஏன் கேள்வி கேட்க வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆவேசமாக கன்டனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications