புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் அதிகாலை 12.10 மணிக்கு ம.பி.யில் முதல் வழக்கு: அமித்ஷா
டெல்லி: 77 ஆண்டுகளுக்குப் பிறகு நமது நாட்டின் சொந்த குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன; இதுவரையிலான குற்றவியல் சட்டங்கள் தண்டனைக்கானவையான இருந்தன; இப்போது நியாயத்துக்கான குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் முதலாவது வழக்கு, மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அதிகாலை 12.10 மணிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
நாட்டில் நடைமுறையில் இருந்த 3 குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு புதிய சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தன. 1. இந்திய தண்டனைச் சட்டத்துக்கு (Indian Penal Code IPC- ஐபிசி) மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, 2023; 2. குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்குப் ( Criminal Procedure Code- CRPC சிஆர்பிசி) பதிலாக பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா; 3. இந்திய ஆதாரச் சட்டம், 1872-க்கு மாற்றாக (Indian Evidence Act, 1872- ஆதார சட்டம்) பாரதிய சாக்ஷய சட்டங்கள் ஆகியவை இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்க்கட்சி எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு கொண்டு வந்ததாக குற்றம்சாட்டுகின்றனர். இது அப்பட்டமான பொய். நாடாளுமன்றத்தில் 9 மணிநேரத்துக்கும் மேல் விவாதம் நடத்தப்பட்டுதான் அனைத்து கட்சி எம்பிக்களும் பங்கேற்ற விவாதத்துக்கு பின்னரே புதிய குற்றவியல் சட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சியில் தண்டனைகள் விதிப்பதற்காகவே குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. நாம் நியாயம் வழங்குவதற்கான குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். 77 ஆண்டுகளுக்குப் பிறகு நமது நாடாளுமன்றம் சொந்தமாக 3 குற்றவியல் சட்டங்களை இயற்றி அது நடைமுறைக்கு வந்துள்ளது. இன்று முதல் காலனி ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்கள் முடிவுக்கு வந்துவிட்டன.
முந்தைய குற்றவியல் சட்டங்களில் போலீசாரின் உரிமை மட்டுமே பாதுகாக்கப்பட்டது. தற்போது நாம் கொண்டு வந்துள்ள சொந்த குற்றவியல் சட்டங்களின் கீழ் பாதிக்கப்பட்டோரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும். நமது நாட்டின் அரசியல் சாசனத்துக்கு ஏற்ப புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சட்டங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது. சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்படுகிற பெண் வீட்டிலேயே வாக்குமூலம் அளிக்கவும் இந்த சட்டங்கள் உதவுகின்றன.
நமது நாட்டில் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்த பின்னர் ம.பி. மாநிலத்தில்தான் முதல் வழக்கு பதிவானது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அதிகாலை 12.10 மணிக்கு முதல் வழக்கு பதிவானது. இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications