ஆக்கககா.. கர்நாடகாவிலும் கால் பதிக்கிறார் பிரசாந்த் கிஷோர்... குமாரசாமியுடன் கை கோர்க்கிறார்!
Recommended Video
பெங்களூரு: கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை வலுப்படுத்தி அதன் வாக்குவங்கியை அதிகரிப்பதற்காக பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் களம் இறங்க உள்ளார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் திமுகவுக்கான பணிகளை தொடங்கும் பிரசாந்த் கிஷோர் அடுத்தக்கட்டமாக மார்ச் மாதத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை சந்திக்க உள்ளார்.
அங்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்டம் கண்டு வருவதால், பி.கே.வின் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கேட்டு அதன்படி செயல்பட குமாரசாமி முடிவெடுத்துள்ளார்.
கருஞ்சட்டை படை
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களில் பிரசாந்த் கிஷோரை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். கடந்த 2014-ம் ஆண்டு மோடிக்காக அரசியல் வியூகம் வகுத்து கொடுத்ததன் மூலம் நாடு முழுவதும் உள்ள தலைவர்களின் கவனத்தை ஈர்த்தார். அதைத்தொடர்ந்து மோடியை போல தங்களுக்கும் வியூகம் அமைத்து தர வேண்டும் என பிரசாந்த் கிஷோரிடம் பல தலைவர்கள் வரிசை கட்டி நிற்கத் தொடங்கினர். இதைகெட்டியாக பிடித்துக்கொண்ட பிரசாந்த் கிஷோர், தனக்கென ஒரு டீமை உருவாக்கி அதில் பணியாற்றுபவர்களுக்கு கருப்பு நிற டீ சர்ட்டை யூனிபார்மாக வழங்கினார்.
ஐஐடி
மெத்த படித்தவர்களையும், ஐஐடி போன்ற நிறுவனங்களில் படித்தவர்களையும், மட்டும் பணிக்கு அமர்த்திக்கொள்ளும் பிரசாந்த் கிஷோர் அவர்கள் மூலம் சில கள ஆய்வுகள் நடத்தி அதன் அறிக்கையை பக்காவாக தயார் செய்து தன்னை சந்திக்கும் அரசியல் கட்சி தலைவரிடம் புள்ளி விவரத்தை புட்டு புட்டு வைப்பார். சதுரங்க வேட்டை படத்தில் வரும் நட்ராஜை போல் பிரசாந்த் கிஷோர் கூறும் புள்ளி விவரத்தை கேட்டு அவரிடம் மனதை பறிகொடுக்காத தலைவர்களே இல்லை. காரணம் அந்தளவுக்கு கட்சி விவரம், பலம், வாக்கு வங்கி, அடுத்தக் கட்டமாக செய்ய வேண்டியது என்ன என விவரங்களை அடுக்குவார். அதைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தமும் போட்டு பல சி க்களை பெற்றுக்கொள்வார்.
மதச்சார்பற்ற ஜனதாதளம்
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டதால் இப்போது அவரது கோபப்பார்வை அதன் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா மீதும் உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில், அங்கு குமாரசாமியுடன் கைகோர்க்க உள்ளார் பிரசாந்த் கிஷோர். சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சிதேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் பி.கே.வின் ஆலோசனையை நாடியுள்ளார் குமாரசாமி.
பிப்ரவரி மாதம்
பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் தனது ஜாகையை தமிழகத்திற்கு மாற்றுகிறார் பிரசாந்த் கிஷோர். ஏற்கனவே திமுகவுடன் போட்டிருந்த ஒப்பந்தப்படி கிரவுன்ட் ஒர்க்கை தொடங்கும் பிரசாந்த் கிஷோர், ஸ்டாலினையும் சந்திக்க உள்ளார். அதைத்தொடர்ந்து மார்ச் முதல் வாரமோ அல்லது பிப்ரவரி இறுதியிலோ பெங்களூருவில் குமாரசாமியை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.