என்.ஐ.ஏ.வுக்கு வரம்பு எல்லைகள் எதுவும் இல்லை.. 2024-க்குள் அனைத்து மாநிலங்களிலும் கிளைகள்: அமித்ஷா
டெல்லி: தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ (NIA)-க்கு வரம்பு எல்லைகள் எதுவும் இல்லை; 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஹரியானாவின் சூரஜ்கண்டில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்களுக்கான சிந்தனை முகாம் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். இந்த முகாமில் நாளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றுவார்.
அமித்ஷா குழுவின் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் சொல்வது என்ன?
2 நாட்கள் முகாம்
இந்த இரண்டு நாள் சிந்தனை முகாமில் பங்கேற்க அனைத்து மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், நிர்வாகிகள் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், மாநில உள்துறைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள், மத்திய ஆயுதக் காவல்படைகளின் தலைமை இயக்குநர்கள், மத்திய காவல் அமைப்புகளும் சிந்தனை முகாமில் பங்கேற்றுள்ளனர்.
என்ன விவாதங்கள்?
2047 தொலைநோக்குப் பார்வை, பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் அறிவித்த 5 உறுதிமொழிகள் ஆகியவற்றை அமலாக்குவதற்கான செயல் திட்டத்தை தயாரிப்பது இந்த இரண்டு நாள் சிந்தனை முகாமின் நோக்கமாகும். கணினி குற்ற நிர்வாகத்திற்கான நடைமுறை, காவல்படைகளின் நவீனமாக்குதல், குற்றவியல் நீதி முறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரித்தல், தரைவழி எல்லை நிர்வாகம், கடலோரப் பாதுகாப்பு, இதர உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
6 அமர்வுகள்
2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா இலக்கை எட்டுவதற்கு மகளிர் சக்தியின் பங்கு முக்கியமானதாகும். பெண்களின் பாதுகாப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும். அவர்களுக்கு பாதுகாப்புச்சூழல் உருவாக்கப்படும். மேற்குறிப்பிட்ட விஷயங்களில் சிறந்த திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்புக்கு தேவையான தேசியக் கொள்கையை உருவாக்குவதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும். ஆறு அமர்வுகளில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் இடம்பெறுகிறது.
என்.ஐ.ஏ. அதிகாரங்கள்
இம்மாநாட்டுக்கு தலைமை வகித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, என்.ஐ.ஏ.வுக்கு வரம்பு எல்லைகள் எதுவும் இல்லை; 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்கப்படும். பயங்கரவாத தடுப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.