ED விசாரணையால் கட்சி தாவிய 13 பேர்! அவர்களில் 9 பேர் படுதோல்வி! தேர்தலில் மக்கள் தந்த மரண அடி
டெல்லி: அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளால் விசாரிக்கப்பட்ட பலர் பாஜகவில் இணைந்து அவர்கள் வேட்பாளராக இருந்த லோக்சபா தேர்தலில் களமிறங்கிய நிலையில், அவர்களில் பலர் தோல்வி அடைந்துள்ளனர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேநேரம் 240 சீட்களில் வென்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அவர்கள் ஆட்சியை அமைக்கிறார்கள்.

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது அதில் பல சுவாரசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கட்சி தாவிய தலைவர்கள்: அதாவது தேர்தலுக்கு முன்பு அரசியல்வாதிகள் பலர் அரசியல்வாதிகள் பாஜக அல்லது பாஜக கூட்டணிக்குத் தாவியிருந்தனர். பொதுவாக இதுபோல கட்சி மாறும் நபர்கள் மீது நேரடியாக அல்லது அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் வழக்குகள் இருக்கும் என்றும் இதுபோல விசாரணை வளையத்தில் இருப்பவர்கள் பாஜகவுக்கு மாறியதும் அந்த கேஸ் முடித்து வைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகளும் குற்றஞ்சாட்டியே வருகிறது.
இதுபோல அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளால் விசாரிக்கப்பட்ட பலர் பாஜகவுக்கும் பாஜக கூட்டணிகளுக்கும் தாவியிருந்தனர். அவர்களில் 13 பேருக்கு இந்த லோக்சபா தேர்தலில் வாய்ப்பும் தரப்பட்டு இருந்தது. இருப்பினும், அவர்களுக்கு மக்கள் ஆதரவு தரவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுவதாக இருக்கிறது.
9 பேர் படுதோல்வி: இதுபோல கட்சி தாவிய 13 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். தேர்தலில் தோற்ற 9 பேரில் 7 பேர் பாஜக அல்லது பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்டவர்களாகும். இவர்கள் மீதோ அல்லது இவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதோ சிபிஐ, வருமான வரித் துறை அல்லது அமலாக்க இயக்குநரகம் வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 13 பேரில், எட்டு பேர் பாஜகவில் நேரடியாகச் சேர்ந்து இருந்தனர்.. ஏழு பேர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் ஒருவர் திரிணாமுல் காங்கிரஸிலிருந்தும் பாஜகவில் ஐக்கியமாகி இருந்தனர். அதேபோல இருவர் தாக்கரே சிவசேனாவில் இருந்து சிவசேனா ஷிண்டே அணிக்கு மாறினார்கள்.. ஒருவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சிக்கு மாறினார்.. மற்ற இருவர் ஜார்கண்ட் விகாஸ் கட்சி மற்றும் PEP என்ற கட்சியில் இருந்து காங்கிரஸுக்கு வந்தவர்கள்.
6 பேர் பாஜக: பாஜகவுக்கு தாவிய 8 பேரில் 6 பேர் படுதோல்வியடைந்தனர். அதேபோல தாக்கரே சிவசேனாவில் இருந்து ஷிண்டே தரப்புக்குத் தாவிய இருவரில் ஒருவர் தோற்றார்.. காங்கிரஸில் இணைந்த இருவரும் தோல்வி அடைந்தனர்.
ராஜஸ்தானில் உள்ள நாகௌரைச் சேர்ந்த ஜோதி மிர்தா கட்சி மாறி படுதோல்வி அடைந்தவர்களில் முக்கியமானவர். மேலும், உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூரை சேர்ந்த கிருபாசங்கர் சிங், கொல்கத்தா உத்தரை சேர்ந்த ராய், ஆந்திர மாநிலம் அருகு பகுதியைச் சேர்ந்தவர் கொத்தப்பள்ளி கீதா, பாட்டியாலாவைச் சேர்ந்த பிரனீத் கவுர், ஜார்கண்டில் உள்ள சிங்பூம் பகுதியைச் சேர்ந்த கீதா கோடா ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.
ஷிண்டே: சிவசேனா ஷிண்டே அணியில் இருந்து, யாமினி ஜாதவ் மும்பை தெற்கு தொகுதியில் தோல்வியடைந்தார்.. அதேபோல காங்கிரஸின் பிரதீப் யாதவ் ஜார்கண்டில் உள்ள கோடா தொகுதியில் தோல்வியடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications