கதறும் நிர்பயா பலாத்கார குற்றவாளி.. சிறைக்குள் கிடைத்த 'அதே தண்டனை..' வக்கீல் வெளியிட்ட ஷாக் தகவல்
Recommended Video
டெல்லி: நிர்பயா பலாத்கார வழக்கின் குற்றவாளி முகேஷ் சிங், திஹார் சிறையில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாக அவரது வழக்கறிஞர் அஞ்சனா பிரகாஷ், உச்சநீதிமன்றத்தில் திடுக்கிடும் தகவலை இன்று தெரிவித்துள்ளார்.
நாட்டையே உலுக்கிய டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் மற்றும் வழக்கில் அனைத்து வகை, சட்ட போராட்டங்கள் நடத்தியும், தூக்கு தண்டனை என்பது, 4 குற்றவாளிகளுக்கும், உறுதி செய்யப்பட்டு விட்டது.
பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு, 4 குற்றவாளிகளையும், தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து உள்ளது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தனது தண்டனையை குறைக்க வக்கீல் மூலம் வாதம் முன்வைத்தார்.
பிப்.1ல் தூக்கு என்றால்.. நிர்பயா குற்றவாளியின் மனு உடனே விசாரணை... தலைமை நீதிபதி அறிவிப்பு
பலாத்காரம்
இன்று மூத்த வக்கீலான அஞ்சனா பிரகாஷ் உச்சநீதிமன்றத்தில் வாதிடுகையில், ஒரு திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். "நீதிமன்றங்கள் எனக்கு மரண தண்டனை மட்டுமே விதித்தன. நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட உத்தரவிடவில்லையே?" கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு, சட்டவிரோத தனிமைச் சிறைவாசம் உட்பட பல வித்தியாச சூழ்நிலைகளை நான் சந்திக்க நேரிட்டது என்றும முகேஷ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
கொலை சர்ச்சை
முகேஷ் சிங்கின் இணை குற்றவாளி ராம் சிங் சிறையில் கொலை செய்யப்பட்டார், ஆனால் இந்த வழக்கு தற்கொலை என மூடப்பட்டது. ராம் சிங் 2013ம் ஆண்டு, மார்ச் மாதம், அவரது சிறை அறையில், தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்றும் முகேஷ் தரப்பு வக்கீல் தெரிவித்தார். மேலும், "கடந்த 5 ஆண்டுகளாக என்னால் தூங்க முடியவில்லை. நான் தூங்க ஆரம்பித்ததும், மரணம் விரட்டுவதை போல நான் கனவு காண்கிறேன்" என்று முகேஷ் சிங் தரப்பில் வக்கீல் தெரிவித்தார்.
தனிமை சிறை
நீதிபதி ஆர் பானுமதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் இன்று இந்த வாதம் முன்வைக்கப்பட்டது. விதிமுறைகளுக்கு எதிராக தனிமைச் சிறையில் இவர்கள், வைக்கப்பட்டுள்ளனர். மரண தண்டனை கைதி அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர்தான் தனிமைச் சிறைக்கு மாற்றப்பட வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன, என்று, அஞ்சனா பிரகாஷ் தனது வாதத்தில் தெரிவித்தார்.
தண்டனை குறைப்பு கூடாது
ஆனால், குற்றவாளி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது, மற்றும் சிறையில் மோசமாக நடத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டுகள், கருணை காட்ட போதுமானது அல்ல என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் வாதத்தின்போது, நீதிமன்றத்தில் தெரிவித்தார். "தவறாக நடத்தப்பட்டது உண்மை என கருதினாலும், அது தண்டனை குறைப்புக்கான காரணமாகாது. கொடூரமான குற்றத்தில் நான் குற்றவாளி என்றாலும், நான் மோசமாக நடத்தப்பட்டதால், எனக்கு கருணை வழங்கப்பட வேண்டும் என்று ஒருவர் கேட்பது சரியல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.