'நாட்டில் சிஸ்டம் சரியில்லை.. அதுதான் இங்கு பிரச்சினை..' ரஜினி ஸ்டைலில் அமைச்சர் நிதின் கட்கரி பன்ச்
டெல்லி: நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்றும் இதனால் தான் இங்கு அதிகபட்ச அரசுத் திட்டங்கள் தாமதமாகின்றன என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
பொதுவாகவே இந்தியாவில் எந்தவொரு திட்டமும் குறிப்பிட்ட தேதிகளில் முடியாது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. தாமதமாகும் திட்டங்களால் பொதுமக்களுக்குத் தான் அதிகம் பிரச்சினை.
அதேபோல, பல மாதங்கள் வரை தாமதமாகும் திட்டங்களால் மக்களின் வரிப்பணமும் அதிகம் வீணாகின்றன. சரியாகக் குறிப்பிட்ட தேதிகளில் திட்டங்களை முடித்தாலே அரசுக்குப் பல கோடி லாபம் கிடைக்கும்.

அமைச்சர் நிதின் கட்கரி
இப்படி திட்டங்கள் தாமதமாவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், அதில் எதுவும் பெரியளவில் பலன் அளிப்பதாகத் தெரியவில்லை. இதனிடையே கட்டுமானம் சட்டம் மற்றும் நடுவர் மன்றம் தொடர்பாக நடைபெற்ற SCL India 2021 conferenceஇல் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டார்.

சிஸ்டம் சரியில்லை
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, "நாட்டில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதிலும் காலதாமதம் ஏற்படுகின்றன. இது திட்டங்களின் செலவுகளைக் கணிசமாக அதிகரிக்கச் செய்கிறது. நான் யார் மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் கூற விரும்பவில்லை, ஆனால் நாட்டில் உள்ள சிஸ்டம் காரணமாகவே அதிகபட்ச திட்டங்கள் தாமதமாகின்றன. அரசு அமைப்புகளைச் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காமல் தாமதம் செய்வதாலேயே இங்குத் திட்டங்கள் தாமதமாகின்றன.

பல நூறு கோடி ரூபாய்
நமது நாட்டில் அனைத்து இடங்களிலும் எல்லா முடிவுகளை எடுப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. இது தான் செலவுகளை அதிகரிக்க முக்கிய காரணம். இருப்பினும், இந்தியப் பொருளாதாரத்தை பூஸ்ட் செய்யும் வகையில் வரும் 2025ஆம் ஆண்டு வரை தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன் திட்டத்திற்காக மத்திய அரசு பல நூறு கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

சிறப்புக் குழு
இந்தியாவில் அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் கட்டுமான துறை முக்கியமான ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். விவசாய துறைக்கு அடுத்தபடியாக, நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பு அளிக்கும் துறையாக கட்டுமானத்துறை உள்ளது. நாட்டில் உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான சிக்கலைத் தீர்க்க எனது தலைமையில் பிரதமர் மோடி ஒரு குழுவை நியமித்துள்ளார். அதில் சுரங்கம், ரயில்வே, சுற்றுச்சூழல் போன்ற அமைச்சர்களும் உள்ளனர். இந்தக் குழுவில் நாங்கள் உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான சிக்கலைத் தீர்க்க முயல்கிறோம்" என்றார்












Click it and Unblock the Notifications