சென்னை- பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே எப்போது முடியும்.. தாமதத்திற்கு உண்மையில் என்ன காரணம்- நிதின் கட்கரி
டெல்லி: சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
தென்னிந்தியாவின் முக்கியமான இரு நகரங்கள் என்றால் அது சென்னையும் பெங்களூரும் தான். இந்த இரு நகரங்களையும் இணைக்கும் வகையில் மத்திய அரசு சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸவே திட்டத்தை ஆரம்பித்தது.

இது இந்தாண்டு தொடக்கத்திலேயே முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருப்பினும், அது தாமதமாகியுள்ளது. தென்னிந்தியாவுக்கு மிகப் பெரிய பூஸ்ட்டாக அமையும் இத்திட்டத்தின் கட்டுமானம் எப்போது முடியும் என்பது நிதின் கட்கரி பதிலளித்துள்ளார்.
எப்போது முடியும்: லோக்சபாவில் இது குறித்த கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார். இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலை கட்டுமானத்தை முடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் உள்ள சாலை திட்டங்களுக்குத் தேவையான கட்டுமான பொருட்களைப் போதியளவில் கிடைக்கச் செய்து இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உதவுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "இந்த அவைக்கு நான் நம்பிக்கை அளிக்க விருப்பப்படுகிறேன். அதாவது டிசம்பர் மாதத்திற்குள் இந்த (சென்னை- பெங்களூர்) எக்ஸ்பிரஸ்வேயை முடிக்க எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறோம். இதன் திட்டம் முடிவடைந்தால் சென்னை- பெங்களூர் பயண நேரம் இரண்டு மணி நேரமாகக் குறையும்" என்றார். அதாவது சென்னையில் இருந்து கிளம்பினால் இரண்டு மணி நேரத்தில் பெங்களூர் சென்றடைய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்: திமுக எம்பி தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "இது தொடர்பாக நான் ஏற்கனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் பேசியுள்ளேன். தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் அமைப்பதில் உள்ள பிரச்சனைகளை அவரிடம் எடுத்துக் கூறினேன். இந்த விவகாரத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால், சாலை அமைப்பதற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் பெறாமல், சாலையை எப்படி முடிக்க முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே திட்டத்தை விரைவுபடுத்துவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண மாநில அரசு அதிகாரிகள் உடன் விவாதிக்கவும் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கேரளா நெடுஞ்சாலைகள்: அதேபோல கேரளா மாநிலம் கொல்லம்- மதுரையை இணைக்கும் NH-774 கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துவதில் ஆகும் செலவில் 50 சதவீதத்திற்குப் பதிலாக 25 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும் என்று கூறியதைக் கேரள அரசு ஒப்புக்கொண்டது. மேலும் மாநில ஜிஎஸ்டி 9 சதவீதத்தைக் கைவிடவும் தயாராக இருந்தது
கேரள முதல்வர் இதை ஏற்றுக்கொண்டார்.. ஆனால் நாங்கள் கேரள அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.. எங்களுக்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவை, குறிப்பாகச் சுரங்கம் அமைப்பதில் மாநில அனுமதிகள் மிகவும் அவசியம்" என்றார்.
ஒரு வேலை மாநில அரசு தனது பங்களிப்பை வழங்க மறுத்தால் இந்தத் திட்டத்திற்கான முழு செலவையும் ஏற்க மத்திய அரசு தயாரா இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நிதின் கட்கரி, "எங்கள் முன்மொழிவுக்கு முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார். அடுத்து கேரள அரசின் முறையான பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என்று மட்டும் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications