2024 லோக்சபா தேர்தல்: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க நிதிஷ்குமார் டெல்லியில் டேரா-ராகுலை சந்திக்கிறார்
டெல்லி: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக பீகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார் இன்று டெல்லி வருகை தந்துள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள நிதிஷ்குமார், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
அடுத்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் டெல்லிக்கு சென்றார் மமதா பானர்ஜி. டெல்லியில் அரசு முறைப்படி பிரதமர் மோடி சந்தித்து பேசினார் மமதா பானர்ஜி.

மமதாவின் தொடர் முயற்சி
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத், ஆனந்த் சர்மா என பலரையும் மமதா சந்தித்து பேசினார். அப்போது டெல்லி செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி, 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் அணி வலுவாக இருக்கும். 2024-ம் ஆண்டு தேர்தல் மோடிக்கும் இந்த நாட்டுக்குமான தேர்தலாக இருக்கும் என கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் மமதா பானர்ஜி டெல்லி பயணம் மேற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்தார்.

சரத்பவார், சந்திரசேகர ராவ் முயற்சிகள்
அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவார், தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் ஆகியோரும் மேற்கொண்டு வருகின்றனர். மாநில உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைக்க முயற்சிகளை மேற்கொள்கிறார்.

நிதிஷ்குமார்
இந்த வரிசையில் பீகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமாரும் இப்போது இணைந்துள்ளார். பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ்குமார், ஆர்ஜேடி-காங்கிரஸ் ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைத்துள்ளார். இது பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இதனால் பீகார் சென்ற தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், நிதிஷ்குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் நிதிஷ்குமார் தேசிய அரசியலில் இடம்பெற வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியும் வருகின்றனர்.

டெல்லியில் முகாம்
இந்நிலையில் இன்று டெல்லி வருகை தந்தார் நிதிஷ்குமார். டெல்லியில் இன்று முதல் 3 நாட்கள் முகாமிடுகிறார் நிதிஷ்குமார். இந்த பயணத்தின் போது ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களை நிதிஷ்குமார் சந்திக்க உள்ளார். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து நின்றால் பாஜகவை எளிதாக வீழ்த்த முடியும் என்ற கருத்தை வலியுறுத்தவும் உள்ளார் நிதிஷ்குமார்.












Click it and Unblock the Notifications