‛15 நிமிட’ அனல் பேச்சும் வேஸ்ட்டா? அவை குறிப்பில் நீக்கப்பட்ட ராகுலின் வார்த்தைகள்! இவ்வளவா? லிஸ்ட்
டெல்லி: மணிப்பூர் வன்முறை குறித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது நேற்று ராகுல் காந்தி 15 நிமிடம் ஆக்ரோஷமாக பேசினார். அப்போது அவர் பாஜகவை விமர்சனம் செய்யததால் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் ராகுல் காந்தி தனது பேச்சில் பயன்படுத்திய ஏராளமான வார்த்தைகள் அவை குறிப்பில் இடம்பெறாமல் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. இந்நிலையில் தான் மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2வது நாளாக விவாதம் நடந்தது. இதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது: சில நாட்களுக்கு முன்பு நான் மணிப்பூர் சென்றிருந்தேன். ஆனால் பிரதமர் மோடி இன்று வரை செல்லவில்லை. ஏனென்றால் மணிப்பூர் இந்தியாவில் இல்லை என அவர் நினைக்கிறார். நீங்கள் மணிப்பூரை இரண்டு துண்டுகளாக துண்டாக்கி உள்ளீர்கள். மணிப்பூரை பிரித்து உடைத்து உள்ளீர்கள்.
மணிப்பூர் கொடூரங்கள் இந்தியாவை கொன்றுவிட்டது. மணிப்பூரில் இந்தியா கொல்லப்படுகிறது. பாரதமாதாவை மணிப்பூரில் கொன்றுள்ளீர்கள். மணிப்பூர் மக்களை கொன்றதால் பாரததாயை நீங்கள் கொன்றுவீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்ல தேசதுரோகிகள்'' என விமர்சனம் செய்தார். மொத்தம் சுமார் 15 நிமிடங்கள் வரை ராகுல் காந்தி அனல்பறக்க பேசினார்.
இதற்கு மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கோஷமிட்டனர். அப்போது திடீரென மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலையீட்டு ‛‛ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும். ஏனென்றால் மணிப்பூரில் நடக்கும் சம்பவங்களுக்கு முந்தைய காங்கிரஸ் அரசு தான் காரணம்'' என்றார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் ராகுல் காந்தி பேசியபோது பயன்படுத்திய பல வார்த்தைகள் அவை குறிப்பில் இடம்பெறாமல் நீக்கம் செய்யப்பட்டுள்ள. அதன்படி ‛பாரதமாதா கொலை', தேசத்துரோகிகள், மணிப்பூரில் இந்தியா கொல்லப்படுகிறது, கொலைகாரர், கொலை, தேசத்துக்கு எதிரானவர்கள் உள்ளிட்ட வார்த்தைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications