குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை.. அமித் ஷா திட்டவட்டம்!
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் எண்ணம் இல்லை, அந்த பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் எண்ணம் இல்லை, அந்த பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டம் பல்வேறு இடங்களில் கலவரமாக மாறி உள்ளது. இதற்கு எதிராக டெல்லியில் இன்று பெரிய அளவில் போராட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அசாமில் 6 நாட்களுக்கு முன் தொடங்கிய போராட்டம் இது. இந்த சட்டம் செயல்பட தொடங்கினால் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் இந்த போராட்டத்திற்கான காரணம். இந்த நிலையில் டெல்லியில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அமித் ஷா இது தொடர்பாக பேசினார்.
சட்டம் எப்படி
அமித் ஷா தனது பேச்சில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தை பெரிதுபடுத்தக்கூடாது. சிலர் நாடு முழுக்க போராட்டம் நடக்கிறது என்று கூறுகிறார்கள். 22 கல்வி நிறுவனங்களில் போராட்டம் நடக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் ஜேஎன்யூ, ஜாமியா மிலியா, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் ஆகிய கல்லூரிகளில் மட்டும்தான் பெரிய போராட்டம் நடக்கிறது.
போராட்டம் இல்லை
வேறு எங்கும் முழு வீச்சில் போராட்டம் நடக்கவில்லை. இந்தியாவில் 400 கல்வி நிறுவனங்கள் இதுபோல் இருக்கிறது. அங்கெல்லாம் போராட்டம் நடக்கவில்லை. அதனால் இதை இந்தியா முழுக்க நடக்கும் போராட்டம் என்று கூறுவது தவறான விஷயம்.
மோசமான நிலைமை
அதேபோல் மாணவர்கள் போராட்டம் செய்யும் போது கலவரம் ஏற்பட்டால் போலீஸ் தடுக்கத்தான் செய்யும். நிலைமை கை மீறி போகும் வரை எங்களால் காத்திருக்க முடியாது. டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் சிலர் போலீசார் மீது கற்களை எறிந்துள்ளனர். இது தொடர்பாக விசாரித்து வருகிறோம்.
செய்ய மாட்டோம்
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் எண்ணம் இல்லை. எங்கள் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பாறை போல உறுதியாக நாங்கள் செயல்படுவோம். அரசியல் கட்சிகள் இதில் அரசியல் செய்தாலும் எங்களுக்கு கவலை இல்லை, என்று அமித் ஷா குறிப்பிட்டு இருக்கிறார்.