இந்தியாவில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா
டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை; அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் கடந்த வாரம் உருமாறிய கொரோனா வைரஸ் B.1.1.529 கண்டறியப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் மட்டுமல்ல ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது.
ஒமிக்ரான் கொரோனா: மூன்றாவது அலையை எதிர்கொள்ள இந்தியா தயாரா?
உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
இது தொடர்பாக ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், 32 முறை உருமாறிய இந்த அதீத பாதிப்புகளை ஏற்படுத்தும் கொரோனா வைரஸுக்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டது. அத்துடன் இதுவரையிலான கொரோனா வைரஸ்களிலேயே மிக அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துகிற- அதிவேகமாக பரவுகிற வைரஸ் இது எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது.
தென்னாப்பிரிக்கா விமான சேவைகள் தடை
இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்கா நாடுகளுக்கான விமான சேவைகளை பல நாடுகள் ரத்து செய்திருக்கின்றன. இதற்கு தென்னாப்பிரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதிய உருமாறிய கொரோனா வைரஸை கண்டறிந்து அறிவித்ததால் எங்களுக்கு இந்த தண்டனையா என குமுறியது தென்னாப்பிரிக்கா.
இந்தியாவில் கட்டுப்பாடுகள்
இதனிடையே தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த சிலருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. ஆனால் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதாக என்பது உறுதி செய்யப்படவில்லை. அவர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கான கொரோனா பரிசோதனைகளை முழுவீச்சில் நடத்த வேண்டும் என்று மாநில சுகாதார துறை செயலாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இந்தியாவிலும் பல்வேறு புதிய பயணக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டும் வருகின்றன.
Recommended Video
ஒமிக்ரான் பாதிப்பு இல்லை
இந்நிலையில் ராஜ்யசபாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டவியா ஒமிக்ரான் குறித்து கூறியதாவது: உலகின் 14 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டிருக்கிறோம். இவ்வாறு மத்திய அமைச்சர் மன்சுவிக் மாண்டவியா கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல ஒருநாள் கொரோனா மரணங்களும் வெகுவாக குறைந்து 200க்கும் கீழ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.