விவசாயத்தில் ஈடுபடும் திட்டமில்லை... ஜியோ டவர்கள் சேதத்தைத் தொடர்ந்து ரிலையன்ஸ் அறிக்கை
டெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் ஜியோ டவர் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் திட்டமிட்டு தங்களுக்கு எதிராகப் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் புதிய விவசாய சட்டங்களை அமல்படுத்தியது. இந்தப் புதிய விவசாய சட்டங்கள் காப்ரேட் நிறுவனங்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் இருப்பதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த மூன்று புதிய சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள், அங்கு 41ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜியோ டவர்கள் சேதம்
இந்த விவசாய சட்டங்கள் மூலம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமே அதிகம் பயனடையும் என்றும் தகவல்கள் பரவின. இதனால் நாட்டில் இருக்கும் பல ஜியோ டவர்கள் தேசப்படுக்கப்பட்டன. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஜியோவுக்கு சொந்தமான 1,500 டவர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக மின்சார இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெனரேட்டர்கள் திருட்டுப் போயுள்ளதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு
மேலும், தங்கள் நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் சேவைகளுக்கு மாநில அரசு உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. முன்னதாக, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதில் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
விவசாயிகளுக்கு ஆதரவு
இந்நிலையில் இது குறித்து இன்று ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்ற இந்திய விவசாயிகளின் விருப்பத்திற்கு ரிலையன்ஸ் முழுமையாக ஆதரவு தருகிறது.
நேரடியாகக் கொள்முதல் செய்வதில்லை
நாங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக எந்த உணவு தானியங்களையும் கொள்முதல் செய்வதில்லை. அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலைக்கே பொருட்களைக் கொள்முதல் செய்யும்படி எங்கள் சப்ளையர்களை நாங்கள் வலியுறுத்துவோம்.
விவசாயத்தில் ஈடுபடும் திட்டமில்லை
ரிலையன்ஸ் குழுமத்தின் எந்தவொரு நிறுவனமும் விவசாய நிலத்தை காப்ரேட் அல்லது ஒப்பந்த விவசாயம் செய்ய நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாங்காது. இது போன்ற பணிகளை மேற்கொள்ளும் எந்தத் திட்டங்களும் எங்களுக்கு இல்லை என்பதால் விவசாய சட்டங்களுக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக போட்டியாளர்கள் காரணம்
மேலும், வன்முறை செயல்கள் குறித்து ரிலையன்ஸ் தனது அறிக்கையில், "இந்த வன்முறைச் செயல்கள் காரணமாக எங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், இதனால் இரு மாநிலங்களில் உள்ள முக்கிய தகவல்தொடர்பு உள்கட்டமைப்பு, விற்பனை மற்றும் சேவை நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் எல்லாம் எங்கள் வணிக போட்டியாளர்களின் தூண்டுதலாலேயே நடைபெறுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.