மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தா.. கிடையவே கிடையாது.. கதவைச் சாத்திய மத்திய அரசு!
டெல்லி: மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தோ, அல்லது சிறப்பு பிரிவு அந்தஸ்தோ வழங்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திரம், பிகார், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்களுக்கு சிறப்பு பிரிவு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதுமே பிரதமரை சென்று சந்தித்து தங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து விட்டு வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் கூறிய அவர் பாஜக முழு பலத்தோடு உள்ளதால் தாங்கள் இப்போது கோரிக்கை விடுக்கும் நிலையிலேயே உள்ளதாகவும், ஒருவேளை பாஜகவுக்கு எம்.பிக்கள் தேவைப்படும் வகையில் அவர்களுக்கு தேர்தலில் குறைவான இடங்கள் கிடைத்திருந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து என்ற கையெழுத்தை பெற்ற பின்னரே பதவி ஏற்றிருப்பேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய அரசு இப்போது எந்த மாநிலத்திற்கும் சிறப்பு அந்தஸ்து கிடையாது என்று கூறியுள்ளது.
சிறப்பு அந்தஸ்து- சிறப்பு பிரிவு அந்தஸ்து
ஒரு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கும் சிறப்பு பிரிவு அந்தஸ்து வழங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது. அதாவது ஒரு மாநிலம் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலம் என்று அறிவிக்கப்பட வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டிய அவசியம். ஆனால், ஒரு மாநிலத்தை தேர்வு செய்து சில பிரிவுகளில் மட்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புமேயானால் அந்த மாநிலத்திற்கு அத்தகைய அந்தஸ்தை வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தாலே போதுமானது. அதற்கென்று நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டங்கள் இயற்ற வேண்டிய அவசியம் இல்லை.
கடந்த முறை மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியமைத்தபோது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் அமைக்கப்பட்டது. இந்த நிதி ஆயோக் எந்த மாநிலத்திற்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க கூடாது என்று கூறிவருகிறது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசும் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என ஏற்கனவே முடிவு செய்து உள்ளது. இருப்பினும் ஆந்திரா, பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் தொடர்ந்து தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
மாநிலங்களவையில் இது தொடர்பாக பேசிய அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ரிபுன் போரா, அசாம் அல்லது வேறு ஏதாவது மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். மேலும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது ஆகாதா? எனவும் அவர் வினவினார்.
இதற்கு பதிலளித்த மத்திய புள்ளியியல் துறை இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங், நிதி ஆயோக் எந்த மாநிலத்துக்கும் சிறப்பு பரிவு அந்தஸ்து அளிக்கக் கூடாது என வலியுறுத்தி கூறியுள்ளது. மேலும், மத்திய அரசிடமும் இப்போது சிறப்பு பிரிவு அந்தஸ்து அளிக்கும் திட்டம் ஏதுமில்லை. மாநிலங்களை மேம்படுத்துவதற்காக நிதி ஆயோக் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. என்று பதிலளித்தார்.