சோனியா சந்திப்புக்கு பிறகு சரத் பவார் சொன்ன அந்த வார்த்தை.. எப்படி தாங்கப்போகிறது சிவசேனா?
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் நடந்த ஆலோசனையின் போது, சிவசேனா தொடர்பாக விவாதிக்கவே இல்லை என்று ஒரே போடாக போட்டுள்ளார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார்.
மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகளில் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில், தேர்தலுக்கு முன்பாக ஏற்படுத்தப்பட்ட பாஜக மற்றும் சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது.
ஆனால் முதல்வர் பதவி, உட்பட பிற அதிகாரப் பங்கீடு தொடர்பாக சரி சம பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்தது சிவசேனா. இதை பாஜக ஏற்கவில்லை.

குடியரசு தலைவர் ஆட்சி
இதனால், அங்கு யாரும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. சட்டசபை கலைக்கப்படவில்லை என்பதால் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு திறந்தே உள்ளது. தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து விடலாம் என சிவசேனா முயற்சித்து வருகிறது.

சோனியா காந்தி
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இன்று டெல்லியில் சோனியா காந்தியை அவர் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் நிலவும், அரசியல் நிலைமை குறித்து சோனியா காந்தியுடன், நான் விரிவாக ஆலோசனை நடத்தினேன்.

அரசியல் பேசவில்லை
அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியும் உடன் இருந்தார். மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் நடுவேயான விவகாரங்களை மட்டுமே பேசுவதற்கான ஒரு சந்திப்பாக அமைந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
170 எம்எல்ஏக்கள்
அப்போது குறுக்கிட்ட நிருபர்கள், சிவசேனா கட்சி, தங்களுக்கு, 170 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி உள்ளதே, என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சரத் பவார், 170 எண்ணிக்கை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் சிவசேனாவிடமே கேட்டு கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

அவரவர் பாணி
முன்னதாக, இன்று காலை மும்பையில் பேட்டியளித்தபோது, பாஜகவும் சிவசேனாவும் ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ளன. அவர்கள் வழியை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று அசால்டாக தெரிவித்தார் சரத் பவார். இதனால் காத்திருந்து காத்திருந்து, காலங்கள் போனதடி என பாடிக் கொண்டிருக்கிறது சிவசேனா.












Click it and Unblock the Notifications