ஆகஸ்ட் 15 வந்தாச்சு.. கொரோனா தடுப்பூசி எங்கே?
டெல்லி: ஆகஸ்ட் 15.. சுதந்திர தினம் மட்டுமல்ல.. கொரோனா எனும் கொடிய நோயிடமிருந்து இந்திய மக்களை சுதந்திரம் பெறச் செய்யும் நாளாகவும் மாறும் என்ற எதிர்பார்ப்பு இந்த நாளின் மீது இருந்தது.
Recommended Video
காரணம்.. கோவேக்ஸின் கொரோனா தடுப்பூசி இன்று, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற, ஐசிஎம்ஆர் கொடுத்த உறுதிமொழிதான்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த, பாரத் பயோடெக் உருவாக்கிய தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்கவா, ஜூலை துவக்கத்தில் எழுதிய கடிதம்தான் இத்தனை எதிர்பார்ப்புக்கும் காரணம்.
அதெல்லாம் நீங்க சொல்லக் கூடாது.. ஏன் சொல்றீங்க.. ரஷ்ய கொரோனா தடுப்பூசி பற்றி கிரண் மஜும்தார் பொளேர்
ஆகஸ்ட் 15ம் தேதி தடுப்பூசி
"பொது சுகாதார அவசரத்தை கருத்தில் கொண்டு" தடுப்பூசி டிரையலை தொடங்குவது விரைவாக்கப்படும் என்று கூறியிருந்தார் பார்கவா. மருத்துவ பரிசோதனையைத் தொடங்குவது தொடர்பான அனைத்து ஒப்புதல்களையும் விரைவாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் கூறியிருந்தார். ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அளவில் தடுப்பூசி அறிமுகமாகும் வாய்ப்பு உள்ளது என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்திருந்தது.
சுதந்திர தின உரை
ஐசிஎம்ஆர் கூறியதை வைத்து.. பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்பது பெரும்பாலானோர் எதிர்பார்ப்பாக இருந்தது. வேக்சின் பற்றிய அறிவிப்பு வருமா என மக்கள் இன்று மோடி உரையை கேட்டனர். மோடியும் வேக்சின் பற்றி பேசினார். ஆனால், இன்னும் பரிசோதனை நிலையில் இருப்பதாக மட்டும் தெரிவித்தார்.
3 வேக்சின்
மொத்தம் 3 கொரோனா தடுப்பூசிகள் பல கட்ட டிரையல்களில் உள்ளன. விஞ்ஞானிகள் அங்கீகாரம் கிடைத்ததும், விரைவாக அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் மோடி. எனவே, இன்றைய தினம் தடுப்பூசி வெளியாகும் என்று நம்பியவர்கள் ஏமாற்றமடைந்தனர். எந்த மாதத்திற்குள் வேக்சின் ரெடியாகும் என மோடி குறிப்பிடாதது மற்றொரு ஏமாற்றம்.
ஏமாற்றம்
ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா, எழுதிய கடிதத்தை பார்த்ததுமே, சுகாதாரத்துறை வல்லுநர்களும், விஞ்ஞானிகளும் சந்தேகம் எழுப்பினர். இவ்வாறு தேதி குறித்து தடுப்பூசி தயாரிப்பது சாத்தியமில்லாதது மற்றும் ஆபத்தானது என்று எச்சரித்தனர். இதன்பிறகு நிலவரத்தை புரிந்து கொண்டு அடுத்த சில நாட்களில் ஐசிஎம்ஆர் ஒரு விளக்கம் வெளியிட்டது. அதில், தங்கள் அமைப்புக்குள் நடந்த, தகவல் பரிமாற்றத்தை தவறாக ஊடகங்கள் புரிந்து கொண்டதாகவும், ஆகஸ்ட் 15ம் தேதிக்குள், வேக்சினை ரெடியாக்க வேண்டும் என்று விரும்பி குறிப்பிட்டோமே தவிர, அது கெடு கிடையாது என்று தெரிவித்தது. ஆனால், நாட்டின் மிக உயர்ந்த ஒரு மருத்துவ அமைப்பே, இப்படியாக ஒரு தேதி குறித்தது, எதற்கு என்றுதான் புரியவில்லை.
அபாயம்
ஒரு பக்கம் ஏமாற்றம் என்றால், மறுபக்கம், தடுப்பூசி வந்துவிடும் என்ற நினைப்பில், பொது சுகாதாரத்தை பின்பற்றாமல் மெத்தனமாக எத்தனை பேர் இருந்தார்களோ, அவர்களால் எத்தனை பேருக்கு நோய் பரவியதோ என்ற சந்தேகங்களும் அச்சத்தை அதிகரிக்கின்றன. ஏனெனில் என்னதான் ஐசிஎம்ஆர் பிறகு விளக்கம் அளித்தாலும், முதலில் அது வெளியிட்ட தகவல்தான் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல நின்றது. எனவே, இனியாவது, மக்களின் உயிர் சார்ந்த இதுபோன்ற விஷயங்களில், உரிய தரவுகள் இல்லாமல், தகவல்கள் பரப்புவதை அனைத்து தரப்பும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது, கோமியத்தால், கொரோனாவை குணப்படுத்தலாம் என்பதை போன்றதொரு, பொய் பரப்புரையாக மாறி, பல மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.