சைவத்தில் இறைச்சியா?.. என்னென்ன கலக்கறீங்க.. லிஸ்ட் வேணும்.. டெல்லி ஹைகோர்ட் போட்ட போடு
உணவு தயாரிக்கும் மூலப்பொருட்களை வெளியிட டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது
டெல்லி: நாம் சாப்பிடும் உணவில் என்ன வகையான மூலப்பொருட்கள் கலந்துள்ளன என்பது குறித்தும், தகவல்களை வெளியிட வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாகவே நாம் உண்ணும் உணவு குறித்த விஷயங்களில் நீதிமன்றம் கவனம் செலுத்தி வருகிறது.. சில வாரங்களுக்கு முன்பிருந்து குஜராத்தில் ஒரு வழக்கு நடந்து வருகிறது.
சாலையோரங்களில் தள்ளுவண்டியில் விற்பனை செய்யப்படும் அசைவ உணவகங்களுக்கு ராஜ்கோட், வதோதரா, ஆமதாபாத் மாநகராட்சிகள் தடை விதித்துவிட்டது.
புரட்டாசி எண்ட்.. இனி சின்ராசை கையில பிடிக்க முடியாது.. மீன் மார்க்கெட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்
ஆமதாபாத்
இதனால், ஆமதாபாத் சாலையோர தள்ளுவண்டி உணவக உரிமையாளர்கள் குஜராத் ஹைகோரட்டில் மனு தாக்கல் செய்தனர்... இந்த தள்ளுவண்டியில் விற்கப்படும் உணவுகள் சுகாதாரமாக இல்லை என்றும், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவே இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆமதாபாத் மாநகராட்சி விளக்கம் தந்திருந்தது..
காட்டம்
மனுதாரர்கள் தரப்பு வாதத்தை கேட்ட பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மாநகராட்சிகளுக்கு என்ன தான் பிரச்னை? என் வீட்டுக்கு வெளியே நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்? மக்கள் விரும்பிய உணவு சாப்பிடுவதை நீங்கள் எப்படி தடுக்க முடியும்? நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை மாநகராட்சி கமிஷனர் முடிவு செய்வாரா?" என்று கேட்டிருந்தார். அந்த வகையில், இப்போது டெல்லி ஹைகோர்ட்டும் உணவு விஷயத்தில் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது..
ஹைகோர்ட்
நாம் சாப்பிடும் உணவில் கலந்துள்ள மூலப்பொருட்கள் குறித்த முழு விவரங்களும் அவற்றின், கவர்களில் அச்சிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கும், எப்எஸ்எஸ்ஏஐ எனப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டிருக்கிறது. குறிப்பாக, அந்த உணவானது, தொழிற்சாலைகளில் இருந்து நாம் பெறுகிறோமா? அல்லது இறைச்சிகளில் இருந்து பெறுகிறோமோ? அல்லது தாவரங்களிலிருந்து பெறுகிறோமா என்பதை அந்த உணவு கவரின் மேல் பக்கத்தில் தெரிவிக்க வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட் நீதிபதிகள் விபின் சங்கி, ஜஸ்மீத் சிங் அடங்கிய அமர்வு கூறியிருக்கிறது.
சைவ உணவு
நாம் உண்ணும் உணவு சைவமா? அல்லது அசைவமா? என்பதை வகைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மனு மீதான விசாரணையில்தான் நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர். வழக்கமாக, உணவு பொருட்கள் அடங்கிய அந்த உறையில் என்னென்ன பொருட்கள் கலந்துள்ளது என்பது தெரிவிக்கப்பட்டிருக்கும்..
உணவு பொருட்கள்
அதேபோல உணவு பொருளை தயாரிக்கும் தேதியும், காலக்கெடு தேதியும் தெரிவிக்கப்பட்டிருக்கும்.. அதேபோல, நிற குறியீடும் தெரிவிக்கப்பட்டிருக்கும்.. எனினும், மூலப்பொருட்கள் பற்றிய அவசியமும் மக்களுக்கு தெரிய வேண்டும் என்று சொல்கிறார்கள் நீதிபதிகள். அதுமட்டுமல்ல, இறைச்சி உணவின் மூலப்பொருட்களை சேர்த்து உணவு வகைகளை தயாரித்து, அதை சைவ உணவாக சந்தைப்படுத்துவது என்பது, சைவ உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பவர்களின் மதநம்பிக்கையையும், கலாச்சார நம்பிக்கையையும் புண்படுத்துவதாகும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
உணவு பாதுகாப்பு
சாப்பாடு பொருட்களுக்கும் மட்டுமல்லாமல், மக்கள் பயன்படுத்தும் எல்லாவித பொருட்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவித்துள்ளனர். இவைகளை அதிகாரிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், அப்படி செய்ய தவறினால், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டத்தை சரிவர பின்பற்றவில்லை என்றே கருதப்பட வேண்டி இருக்கும் என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.