"பாஜக என்ன வேண்டுமானாலும் செய்பவர்கள்தான்.. ஆனால்.." நெஞ்சை நிமிர்த்திய ராகுல் காந்தி!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை கண்டு எங்களுக்கு பயமில்லை என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை யங்க் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்று அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ராகுல் மற்றும் சோனியா காந்தி ஆகியோரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
காங். அலுவலகம், சோனியா வீடு முன்பு திடீர் என போலீஸ் குவிப்பு- நாடாளுமன்றத்தை முடக்கும் எம்.பி.க்கள்
அமலாக்கத்துறை
அதேபோல் இருவர் அளிக்கும் பதில்களும் ஒரே போன்று இருக்கிறதா என்று சரிபார்க்கப்பட்டது. இதனிடையே இவர்கள் இருவரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த காங்கிரஸ் கட்சி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டாகப் போராட்டம் நடத்தினர். அதேபோல் பல்வேறு மாநிலங்களில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலகத்திற்கு சீல்
இதன்பின்னர் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தலைமை அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென நேஷனல் ஹெரால்டு அலுவலகம், யங் இந்தியா அலுவலகம் ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சி தலைமை அலுலகம், சோனியா காந்தி வீடு ஆகியவை முன்பாக அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக அமலாக்கத்துறை விளக்கம் அளிக்கையில், முன்னெச்சரிக்கையாகத்தான் போலீசார் குவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ராகுல் காந்தி
இதனால் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் இதுவரை நடக்கவில்லை. இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறுகையில், நேஷனல் ஹெரால்டு வழக்கு ஒரு மிரட்டல் முயற்சி. கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் எங்களை அமைதிப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள்.
Recommended Video
பயமில்லை
அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் உண்மையை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், நாங்கள் நரேந்திர மோடியை கண்டு பயப்படப்போவதில்லை. இந்தியாவின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.