அட தேர்தலுக்காக இல்லைங்க.. அமலாக்கத்துறை தான் எதிர்க்கட்சிகளை இணைக்கிறது.. லோக்சபாவில் மோடி கிண்டல்
எதிர்க்கட்சிகள் தேர்தல் சமயத்தில் ஒன்றிணைய வேண்டும். ஆனால் அவர்களை அமலாக்கத்துறை தான் ஒன்றிணைக்கிறது என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கிண்டல் செய்தார்.
டெல்லி: இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் தேர்தல் சமயத்தில் ஒன்றிணைய வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகளை அமலாக்கத்துறை தான் அவ்வப்போது ஒன்றிணைக்க செய்கிறது என நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனை மற்றும் விசாரணையின்போது எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இப்படி ‛அட்டாக்' செய்தார். இதுதவிர பல விஷயங்களில் குறிப்பாக காங்கிரஸ் கட்சியை மோடி கடுமையாக தாக்கி பேசினார்.
நாடாளுமன்றத்தில் கடந்த 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து அமர்வுகள் நடைபெற்றன. ஆனால் அதானி குழுமம் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் தொடர்ந்து அமளி செய்தனர். இதனால் சபை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வந்தன.

ராகுல் மீது அட்டாக்
இந்நிலையில் தான் இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு உரைக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து பேசினார். அப்போது அவர், ‛‛ஜனாதிபதி உரைக்கு முதலில் நான் நன்றி தெரிவிக்கிறேன். இது தொலைநோக்கான உரையாகும். மக்களுக்கு நல்ல வழிக்காட்டுதல்களை இந்த உரை வழங்கி உள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு அவர்களின் தரத்தை காட்டுகிறது. நேற்று ராகுல் பேசும்போது ஒருவிதமான கொதிநிலையில் இருந்தார். நாடாளுமன்றத்தில் ஒவ்வொருவரும் தங்களின் குணநலனுக்கு ஏற்றவாறு உரையாற்றினர்.

ஒருங்கிணைக்கும் அமலாக்கத்துறை
எதிர்க்கட்சிகள் தேர்தல் களத்தில் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அவர்களை அமலாக்கத்துறை தான் ஒன்றிணைத்துள்ளது. 2004 முதல் 2014 வரையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உலக அளவில் இந்தியாவின் குரல் பல்வீனமாக இருந்தது. ஊழல்கள் நடைபெற்றது. வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடியது. இந்தியாவுக்கான வாய்ப்புகள் நெருக்கடிகளாக மாறின.

எதிராக நடந்தாலே எதிர்ப்பு
தற்போதைய சூழலில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஏதேனும் நடந்தால் உடனே எதிர்க்கின்றன. விமர்சனம் செய்கின்றன. இந்தியாவின் ராணுவம் எதிராளிகளை எதிர்த்து தைரியமாக செயல்பட்டாலும் கூட விமர்சிக்கின்றனர். விசாரணை அமைப்புகள் ஊழலுக்கு எதிராக செயல்பட்டாலும் அதனையும் தாக்கி பேசுகின்றன'' என கடுமையாக விமர்சனம் செய்தார்

காங்கிரஸ் எதிர்ப்பு
பிரதமர் மோடியின் இந்த உரைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதிகாக்கும்படி சபாநாயகர் ஓம்பிர்லா கூறியும் எதிர்க்கட்சியினர் கேட்கவில்லை. இது ஒருபுறம் இருக்க பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்க்கட்சியினரை தொடர்ந்து ‛அட்டாக்' செய்தார். பிரதமர் மோடியின் இந்த உரையை மத்திய அமைச்சர்கள், பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் கைத்தட்டி வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications