தொடரும் சிக்கல்.. தள்ளிப்போகும் சிபிஐ இயக்குனர் தேர்வு.. என்ன காரணம்?
சிபிஐ இயக்குனரை தேர்வு செய்வதற்காக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
டெல்லி: சிபிஐ இயக்குனரை தேர்வு செய்வதற்காக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் சிபிஐ இயக்குனர் தேர்வு தள்ளிப்போய் இருக்கிறது.
சிபிஐ அமைப்பிற்கு விரைவில் புதிய இயக்குனர் தேர்வு செய்யப்பட உள்ளார். சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வெர்மா கடந்த இரண்டு வாரம் முன் பிரதமர் மோடி தலைமையிலான விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு குழு மூலம் நீக்கப்பட்டார்.
சிபிஐ அமைப்பிற்குள் நிலவி வந்த பிரச்சனைகளை தொடர்ந்து, அலோக் வெர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து அலோக் வெர்மா வழக்கு தொடுத்து அதில் வெற்றி பெற்றும் கூட பிரதமர் மோடி தலைமையிலான மூன்று பேர் கொண்ட விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு குழு அலோக் வெர்மாவை சிபிஐ இயக்குனர் பொறுப்பில் இருந்து நீக்கியது.

தேர்வு செய்ய வேண்டும்
தற்போது சிபிஐ இடைக்கால இயக்குனாராக நாகேஸ்வரராவ் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று புதிய சிபிஐ இயக்குனர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பிரதமர் மோடி தலைமையிலான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த உறுப்பினருமான மல்லிகார்ஜுனா கார்கே கொண்ட விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு குழு புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்ய ஆலோசனை நடத்தியது.

ஏன் இல்லை
ஆனால் இந்த குழு நேற்று கூடியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நேற்று மூன்று மணி நேரம் இவர்கள் மூவரும் புதிய சிபிஐ இயக்குனர் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். ஆனால் இதில் எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த குழு மீண்டும் கூடி சிபிஐ இயக்குனரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மோடி என்ன
இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி, புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்ய அதிக ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது. மாறாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுனா கார்கே இருவரும் இன்னும் கூடுதல் விவரங்கள் வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அதாவது பரிசீலனையில் உள்ள நபர்களை பற்றி கூடுதல் விவரங்களை இவர்கள் இருவரும் கேட்டு இருக்கிறார்கள்.

என்ன காரணம்
பரிசீலனையில் உள்ள நபர்கள் எங்கு எல்லாம் பணியாற்றி இருக்கிறார்கள். அவர்களின் பின்புலம் என்ன. அவர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் என்ன, சர்ச்சைகள் என்ன என்று பல விஷயங்களை இவர்கள் கேட்டு இருக்கிறார்கள். இதனால்தான் இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் இதற்கான அடுத்த சந்திப்பு கூட்டம் நடக்கும்.












Click it and Unblock the Notifications