இந்தியா மட்டும் இல்லை.. 2024-ல் தேர்தலை சந்திக்கும் 76 நாடுகள்.. லிஸ்டில் இத்தனை டாப் நாடுகளா?
டெல்லி: 2024 ஆம் ஆண்டில், உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலான மக்கள் தங்கள் நாடுகளில் நடக்கும் தேர்தலில் வாக்களிக்க உள்ளார்கள். அதாவது இந்த ஆண்டில் மொத்தம் 76 நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில், உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகளில் 8 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
2023 - ஆம் ஆண்டுக்கு விடை கொடுத்து விட்டு புத்தாண்டை உற்சாகமாக உலக மக்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர். இந்த 2024 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு மிக முக்கிய ஆண்டாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய முனைப்பு காட்டி வருகிறது.

அதேவேளையில், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்த இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. நாடு முழுவதும் உள்ள லோக்சபா தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிட இந்தியா கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
76 நாடுகளில் தேர்தல்: இது தொடர்பான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையிலும் இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரமாக உள்ளன. இதனால், தேர்தல் திருவிழா இப்போதே தொடங்கிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு அரசியல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. இந்தியாவில் மட்டும் இல்லை.. உலகம் முழுவதும் 76 நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலான மக்கள் இந்த ஆண்டு தங்கள் நாடுகளில் தேர்தலில் வாக்களிக்க உள்ளார்கள். அடுத்த ஆண்டில் தேர்தல் நடைபெறும் 76 நாடுகளில் உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகளில் 8 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யா, வங்காளதேசம், பிரேசில், இந்தோனேசியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது.
அமெரிக்காவில் தேர்தல்: இந்த 8 நாடுகள் உலகின் மொத்த ஜிடிபியில் 35 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. சர்வதேச பொருளாதார ரீதியிலும் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் நடைபெறும் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அக்டோபர் மாதம் பிரேசிலில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் களம் இறங்க போவதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதேபோல், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோரும் போட்டியிடும் முனைப்பில் உள்ளனர். அமெரிக்காவில் நடைபெறும் இந்த தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அதிபராக யார் ஆகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒட்டு மொத்த உலகம் முழுவதுமே ஏற்பட்டுள்ளது.
இலங்கையிலும் தேர்தல்: அதேபோல், ரஷ்யாவிலும் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. உக்ரைன் மீதான போரால் பல்வேறு நாடுகளுடன் மோதல் போக்கை புதின் கடைபிடித்துள்ளார். அதுபோக உள்நாட்டிலும் புதினுக்கு சில எதிர்ப்புகள் உள்ளன. இத்தகைய சூழலில் தான் அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது.
உலகம் முழுவதிலும் உள்ள 76 நாடுகளில் நடைபெற உள்ள இந்த தேர்தலில் பணவீக்கம், போர், கடன் பிரச்சினை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது. பொருளாதார நெருக்கடியால் அரசியல் குழப்பம் ஏற்பட்ட இலங்கையிலும் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஐஸ்லாந்து, மோல்டோவா, பனமா, மெக்சிகோ, துனிஷியா தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தேர்தலை சந்திக்க உள்ளன.












Click it and Unblock the Notifications