நிதிஷ்குமார் மட்டுமில்லை.. பீகாரில் காங்கிரஸ் எம்எல்ஏக்களே பாஜக பக்கம் செல்ல திட்டம்? பரபர தகவல்
டெல்லி: பீகார் மாநிலத்தில் இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகப் பரபர தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தில் இப்போது நிதிஷ்குமார் முதல்வராக இருக்கிறார். அங்கே நிதிஷ்குமாரின் ஜேடியு, லாலு பிரசாத் யாதவின் ஆர்டிஜே மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சியை அமைத்து இருந்தன.

இதற்கிடையே அங்கே கூட்டணியில் இப்போது குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஜேடியு மற்றும் ஆர்ஜேடி இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.
பீகார் அரசியல்: அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், சமீபத்தில் கூட லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவை மறைமுகமாகச் சாடும் வகையில் பேசியிருந்தார். வாரிசு அரசியல் குறித்து நிதிஷ்குமாரின் பேச்சு லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தைச் சாடும் வகையிலேயே இருந்தது. இதற்கு லாலு பிரசாத் யாதவின் மகள் எக்ஸ் தளத்தில் பதிலளிக்க நிலைமை மோசமானது.
இந்தச் சூழலில் தான் நிதிஷ் குமார் அங்கே கூட்டணியில் இருந்து வெளியேற உள்ளதாகக் கடந்த சில நாட்களாகத் தகவல்கள் பரவி வருகிறது. இதற்காக அவர் தனது எம்எல்ஏக்களை பீகார் தலைநகர் பாட்னாவுக்கு அழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது பீகார் மாநிலத்தில் புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு சில காலமே இருக்கும் நிலையில், நிதிஷ்குமார் இப்படிச் செய்வது இந்தியா கூட்டணிக்கே சிக்கலை ஏற்படுத்தும்.
நிதிஷ்குமார்: ஏனென்றால் நிதிஷ்குமார் முன்னெடுப்பில் தான் முதலில் இந்தியா கூட்டணியே உருவானது. அவர் பீகார் தலைநகர் பாட்னாவில் கூடிய கூட்டத்தில் தான் முதல்முறையாக பல்வேறு எதிர்க்கட்சிகள் கூடின. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஒரே அணியில் வந்தது அதுவே முதல்முறை. அதன் பின்னரே இந்தியா கூட்டணி பேச்சுகள் வலுப்பெற்றது.
இந்தச் சூழலில் பீகாரில் ஏற்பட்ட இந்த அரசியல் குழப்பம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பீகாரில் அவர் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுக்குச் செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை பாஜகவுடன் அவர் கை கோர்த்து முதல்வராகப் பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் நிதிஷ்குமார் தரப்பு எந்தவொரு விளக்கமும் தரவில்லை. அதேநேரம் இந்த தகவல்களை மறுக்கவும் இல்லை.
10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்: இதற்கிடையே பீகார் அரசியல் நெருக்கடி குறித்து இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 10க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. 10க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக உடன் தொடர்பில் இருப்பதாகப் பீகார் பாஜக வட்டாரங்கள் ஆங்கில ஊடகங்களிடம் கூறியுள்ளது.
பீகாரில் காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணியில் இருந்து வெளியேறி ஜேடியுவின் நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் கை கோர்க்க உள்ளதாகத் தகவல் பரவும் நிலையில், இந்தத் தகவல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பாஜக ஏற்கனவே இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் நித்யானந்த் ராயை பீகாருக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்து வரும் நாட்களில் பீகார் மாநிலத்தில் நடக்கும் சம்பவங்கள் அம்மாநில அரசியலை மட்டுமின்றி, தேசிய அரசியலையும் தீர்மானிக்கும் ஒன்றாக மாறும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications