புதிய அரசு.. டெல்லியில் மையம் கொண்டிருக்கும் 'மகா'ராஷ்டிரா புயல்... பரபர சந்திப்புகள்!
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை இன்று சந்தித்தார். ஆனால் மகாராஷ்டிராவில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதி உதவி கோரி அவர் அமித்ஷாவிடம் மனு அளித்திருக்கிறார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களாகிவிட்ட போதும் புதிய அரசு அமையவில்லை. சிவசேனாவின் சமமான அதிகாரப் பகிர்வு என்கிற நிபந்தனையை ஏற்கவே மாட்டோம் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.
சிவசேனா- பாஜக நிலை
பாஜகவின் இந்த திட்டவட்டமான நிலைப்பாட்டால் கடும் அதிருப்தி அடைந்துள்ள சிவசேனா பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. அதேநேரத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் சில தலைவர்களோ சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு தரக் கூடாது என்கிற கருத்தையும் முன்வைக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் குழப்பம்
இருப்பினும் சூழ்நிலைக்கேற்ப சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்கிற கருத்தையும் அக்கட்சியின் தலைவர்களில் ஒருசிலர் கூறி வருகின்றனர். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் குழப்பம் தொடருகிறது.
பட்னாவிஸ்- அமித்ஷா சந்திப்பு
இந்நிலையில் சிவசேனாவுடனான இழுபறிக்கு தீர்வு காண பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை இன்று மகாராஷ்டிரா பாஜக சட்டசபை குழு தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லியில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, மழையால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிவாரணம் விரைவாக கிடைக்க வலியுறுத்தி அமித்ஷாவிடம் பட்னாவிஸ் மனு கொடுத்தார்.
ஆட்சி அமைப்போம்
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக நான் எந்த வித கருத்தும் தெரிவிக்கப்போவது இல்லை; அதேநேரத்தில் மகாராஷ்டிராவில் புதிய அரசு விரைவில் அமையும்.. அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று மட்டும் கூறினார்.
சோனியா- பவார் சந்திப்பு
இதனிடையே காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து இன்று சந்தித்து பேசினார். அப்போது சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்கிற ஒரு சில தலைவர்களின் கருத்துகள் குறித்தும் அது எப்படியான தாக்கத்தை தரும் என்பது பற்றியும் இருவரும் விவாதித்தனர்.