20 ஆயிரம் பணத்தை எடுக்க வங்கிக்கு வந்த எலும்புக்கூடு.. அக்காவை தூக்கி வந்த தம்பி
புவனேஸ்வர்: சகோதரியின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப் பெறுவதற்கான ஆதாரமாக, ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் அவரது எலும்புக்கூட்டைத் தோண்டியெடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பலரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டேக் செய்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்துரு மஜ்கி. இவரது சகோதரி பனா மஜ்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். உயிரிழந்த பனா மஜ்கியின் வங்கிக் கணக்கில் அவர் சேமித்து வைத்திருந்த சுமார் 25,000 ரூபாய்க்கு மேல் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அந்தப் பணத்தை எடுப்பதற்காக சந்துரு மஜ்கி வங்கிக்குச் சென்றபோது, வங்கி அதிகாரிகள் அவரது சகோதரி இறந்ததற்கான "இறப்புச் சான்றிதழ்" அல்லது அரசு வழங்கிய அதிகாரப்பூர்வ ஆதாரங்களைக் கேட்டுள்ளனர். ஆனால் சந்துரு மஜ்கி உள்பட அங்குள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பல நேரங்களில் இறப்புச் செய்தியை முறையாகப் பதிவு செய்வதில்லை. இதனால் சந்துரு மஜ்கியிடம் உடனடி சான்றிதழ் இல்லை. வங்கி அதிகாரிகள் தொடர்ந்து ஆதாரங்களைக் கேட்டு வற்புறுத்தியதாகவும், அவர் சொன்ன காரணங்களை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து வங்கி அதிகாரிகளுக்குத் தனது சகோதரி இறந்துவிட்டார் என்பதை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்ற விரக்தியில், சந்துரு மஜ்கி ஊர் மக்கள் முன்னிலையில் இடுகாட்டிற்குச் சென்று, அடக்கம் செய்யப்பட்ட தனது சகோதரியின் உடலை (எலும்புக்கூடாக மாறிய நிலையில்) தோண்டி எடுத்துள்ளார். தோண்டியெடுத்த அந்த எலும்புகளை ஒரு மூட்டையில் கட்டி, அதை ஆதாரமாகக் காண்பிக்க அவர் முயன்றது காண்போரை நெஞ்சைப் பதற வைத்தது.
இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்திய அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். "டிஜிட்டல் இந்தியா" பேசும் நாட்டில், ஒரு ஏழை தனது உரிமையைப் பெற இவ்வளவு கொடூரமான செயலைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது? கார்ப்பரேட் நிறுவனங்களின் பல கோடி கடன்களைத் தள்ளுபடி செய்யும் வங்கிகள், ஏழை மக்களிடம் மட்டும் ஏன் இவ்வளவு கெடுபிடி காட்டுகின்றன? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த நபருக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், வங்கி நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. மனிதநேயமற்ற இந்தச் சம்பவம் இந்திய வங்கித் துறையில் ஏழை மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை அப்பட்டமாக அம்பலப்படுத்தி உள்ளது என்பது கசப்பான உண்மை.












Click it and Unblock the Notifications