லோக்சபாவில் சிவன் படத்தை கையில் எடுத்த ராகுல் காந்தி.. பாஜக எம்பிகள் எதிர்ப்பு.. ஒரே கூச்சல் குழப்பம்
டெல்லி: லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று பேசும் போது சிவன் படத்தைக் காட்டி பேசினார். அப்போது பாஜக எம்பிக்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், சிவன் படத்தை லோக்சபாவில் காட்ட அனுமதி இல்லையா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். மேலும், அரசியல் சாசனத்தைத் தாக்குதல்களில் இருந்து எதிர்க்கட்சிகள் பாதுகாத்துள்ளதாகத் தெரிவித்தார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 99 சீட்களில் வென்ற காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டார்.

ராகுல் காந்தி: இதற்கிடையே இன்று லோக்சபாவில் ராகுல் காந்தி பேசும் போது, பாஜக எம்பிக்கள் முழக்கமிட்டனர். வாழ்க அரசியல் சாசனம் என ராகுல் உரையைத் தொடங்கிய போது, பாரத் மாதா கி ஜே என பாஜக எம்பிக்கள் கோஷமிட்டனர். மேலும், ராகுல் காந்தி இந்து கடவுளான சிவன் படத்தைக் காட்டி ராகுல் காந்தி லோக்சபாவில் உரையாற்றினார்.
இதற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், லோக்சபாவில் சிவன் படத்தைக் காட்ட அனுமதி இல்லையா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். மேலும், சிவன் கையில் இருக்கும் திரிசூலம் வன்முறைக்கானது இல்லை.. அகிம்சைக்கானது என்ற அவர், சிவன் படத்தைக் காங்கிரஸ் காட்டியதால் சிலருக்குக் கோபம் வந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
முழக்கம்: தொடர் தாக்குதல்களில் இருந்து அரசியலமைப்பைப் பாதுகாத்துள்ளோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தி பேசும் போது பாஜக எம்பிக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார். குறிப்பாக நீட், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விஷயம் குறித்து பேசினார். மேலும் அவர், "அதிகாரத்தை விட எப்போதும் உண்மை சக்தி வாய்ந்தது.. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை.. ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை" எனறார்.
மேலும் அக்னிவீர் திட்டம் குறித்தும் ராகுல் காந்திக்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையே விவாதம் நடந்தது. அப்போது குறுக்கிட்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்துவதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், அக்னிவீர் திட்டத்தில் ஒருவர் உயிரிழந்த போது ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
லோக்சபாவில் ராகுல் காந்தி இன்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார். நீட் விவகாரம், வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்தும் அவர் மத்திய அரசை விமர்சித்துப் பேசினார்












Click it and Unblock the Notifications