எவ்வித காரணமுமின்றி வீட்டுச் சிறையில் உள்ளோம்... காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ட்வீட்
டெல்லி: எவ்வித காரணமுமின்றி குடும்பத்திலுள்ள அனைவரையும் காஷ்மீர் போலீஸ் வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாக முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ட்வீட் செய்துள்ளார்.
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 360ஐ கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதிராகக் காஷ்மீர் முழுவதும் மிகப் பெரியளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் காரணமாக மாதக் கணக்கில் காஷ்மீரில் இணையச் சேவை முடக்கப்பட்டன. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து சில இடங்களில் வன்முறை நிகழ்வுகளும் ஏற்பட்டன.

வீட்டுச் சிறையில் தலைவர்கள்
இதன் காரணமாகக் காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா, அவரது தந்தையும் ஸ்ரீநகர் எம்பியுமான பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுடன் மாநிலம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய அரசியல் தலைவர்களும் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டனர்.

புதிய காஷ்மீர்
இதன் காரணமா காஷ்மீர் அரசியலில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்தது. இந்நிலையில், தற்போது உமர் அப்துல்லா குடும்பத்துடன் தன்னை போலீசார் வீட்டுச்சிறையில் வைத்துள்ளதாக ட்வீட் செய்துள்ளார். தனது வீட்டின் முன் போலீஸ் வாகனங்கள் நிற்கும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ள அவர், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகான புதிய காஷ்மீர் இது என்றும் பதிவிட்டுள்ளார். எவ்வித விளக்கமும் இல்லாமல் தற்போது வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வீட்டுச் சிறை
மேலும், "நானும் என் தந்தையும் தான் வீட்டுச் சிறையில் உள்ளோம் என்றாலும்கூட பரவாயில்லை. அவர்கள் என் சகோதரி மற்றும் அவரது குழந்தைகளையும் கூட வீட்டுச் சிறையில் அடைத்துள்ளனர். எவ்வித விளக்கமும் இல்லாமல் எங்களை வீட்டுச்சிறையில் அடைப்பது தான் உங்கள் புதிய ஜனநாயகமா! எங்கள் வீட்டில் பணிபுரியும் ஊழியர்களைக்கூட அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இது கடும் கோபத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

காஷ்மீர் போலீஸ் விளக்கம்
உமர் அப்துல்லாவின் இந்த ட்விட்டர் பதிவு ட்விட்டரில் வைரலானது. இதையடுத்து தற்போது காஷ்மீர் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து காஷ்மீர் போலீஸ் தனது ட்விட்டரில், "லெத்போரா (புல்வாமா) பயங்கரவாத தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவே வி.ஐ.பிக்களும் பாதுகாக்கப்பட்ட நபர்களும் எந்த ஒரு பயணத்தையும் திட்டமிட வேண்டாம் என்று முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது" என்று பதிவிட்டுள்ளனர்,












Click it and Unblock the Notifications