ஒரே நாடு ஒரே தேர்தல்-தமிழ்நாடு திமுக அரசு தொடருவதில் சிக்கல்? அமித்ஷாவுடன் ஆளுநர் ரவி இன்று ஆலோசனை!
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த 2 வாரங்களில் 2-வது முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு ஆளுநருக்கும் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு தொடருகிறது. தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுகள் பலவற்றையும் பொதுவெளியில் ஆளுநர் ரவி பகிரங்கமாக விமர்சித்து வருகிறார்.

தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்த மசோதாக்கள் பலவற்றுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்துள்ளார் ஆளுநர். அத்துடன் தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத இந்துத்துவா கருத்துகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி, பொது நிகழ்ச்சிகளில் பேசி வருவது சர்சையாகி இருக்கிறது.
இந்நிலையில் கடந்த 18-ந் தேதி ஆளுநர் ரவி, டெல்லி சென்றிருந்தார். அங்கு 3 நாட்கள் தங்கி இருந்தார். அப்போது தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு எதிரான பாஜகவின் ஊழல் கோப்புகளை மத்திய அரசிடம் ஆளுநர் ரவி கொடுத்ததாக கூறப்பட்டிருந்தது.
தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய பாஜக தீவிரமாகி இருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு கலைக்கப்படும் சூழ்நிலை உருவாகலாம் என்கிற அச்சம் உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் பயணமாக நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் முகாமிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டு அரசியல், ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ்நாடு சட்டசபை முன்கூட்டியே கலைக்கப்பட வேண்டும்; அது ஏற்படுத்தும் தாக்கங்கள், சாதக பாதக அம்சங்கள் உள்ளிட்டவை குறித்தும் இன்றைய சந்திப்பில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications