“ஷாக்” கொடுத்த நிர்மலா.. பட்ஜெட்டில் 100 நாள் வேலைக்கான நிதி குறைப்பு! 6 ஆண்டுகளில் ரொம்ப கம்மி
100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி இதுவரை இல்லாத அளவுக்கு மிகக்குறைவாக ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
டெல்லி: இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2023 -2024 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், 100 நாள் வேலை திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி இதுவரை இல்லாத அளவுக்கு மிகக்குறைவாக ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
மோடி 2.O அரசின் கடைசி முழு நீள பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதில் வரி விகிதம், விவசாயம், கல்வி, தொழிற்துறை தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
அந்த வகையில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டும் ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
இது பட்ஜெட்டா? இல்லவே இல்லை.. மளிகை கடைக்காரரின் பில்.. நிர்மலா சீதாராமனை கடுமையாக சாடிய சு.சாமி
மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டம்
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சாலை பராமரிப்பு, நீர் நிலைகளை தூர்வாருதல், கிணறு தோண்டுதல், முட்புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டு ஊதியம் வழங்கப்பட்டது.
நூறு நாள் நிச்சய வேலை
ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் கிராம மக்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பணி வழங்கி ஊதியம் வழங்க வேண்டும் என்பதால் இதை நமது தமிழ்நாடு மக்கள் 100 நாள் வேலை திட்டம் என்று கூறி வருகிறார்கள். இதன் மூலம் கிராம பகுதிகளில் உள்ள ஏராளமான பெண்கள், முதியோர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன.
விளிம்பு நிலை மக்களுக்கு சுதந்திரம்
அத்துடன் கிராமங்கள் குறிப்பிட்ட பண்ணையார்கள், முதலாளிகளை மட்டும் நம்பி முறையான கூலி இல்லாமல் அவர்களுக்கு சேவை செய்து வந்த ஏழை, விளிம்பு நிலை மக்கள் அதிலிருந்து வெளியேறி சுதந்திரமாக பணிபுரியும் வாய்ப்பை இந்த திட்டம் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பல கோடிக்கணக்கான கிராம மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.
பொருளாதார வளர்ச்சிக்கு உதவி
இதனால் கிராமபுற பொருளாதாரம் நிலையாக இருப்பதுடன் நாட்டின் பொருளாதார நிலையும் சீராக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், மத்திய அரசு இந்த திட்டத்துக்காக ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கும் நிதி படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி அளவுக்கு இத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.
பட்ஜெட்டில் நிதி குறைப்பு
இந்த நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்து இருக்கும் நிதி ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே. கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.89.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து இருந்த நிலையில் தற்போது சுமார் ரூ.29.4 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டு உள்ளது.
வேலையில்லா திண்டாட்டம்
கடந்த 2017 - 2018 நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இருந்து இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ள பட்ஜெட் வரை எடுத்துக்கொண்டால் இந்த நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள குறைவான நிதி இதுதான். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பன்மடங்கு பெருகியுள்ள நிலையில் இதற்கான நிதி குறைக்கப்பட்டு இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.