உலக லெவல் ட்ரெண்டிங்கில் ‘ஆபரேஷன் சிந்தூர்’.. இந்தியாவின் சரவெடி பதிலடியால் பரபரத்த சமூக வலைதளங்கள்!
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை நடத்தி, 9 தீவிரவாத கேம்ப்களை அடித்து நொறுக்கியுள்ளது இந்திய ராணுவம். இதையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆகி இருக்கிறது. எக்ஸ் தளத்தில், ஆபரேஷன் சிந்தூர் உலகளவில் 2 ஆம் இடத்திலும், தேசிய அளவில் முதலிடத்திலும் டிரெண்டிங்கில் உள்ளது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நேற்று நள்ளிரவில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம்.

ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் இடம், ஆள் சேர்ப்பு, தங்கும் இடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீவிரவாதிகளின் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு குறி வைத்து அழிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத முகாம்களை அழிக்க நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 வரை 25 நிமிடங்கள் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர் இ தொய்பாவின் 3 இலக்குகள், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் 2 இலக்குகள் அழிக்கப்பட்டு உள்ளன.
சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்
சமூக வலைதளமான எக்ஸ் வலைதளத்தில் உலக அளவில் ஆபரேஷன் சிந்தூர் டிரெண்டிங்கில் 2வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. இது தவிர, தேசிய அளவில் ஜெய்ஹிந்த், இந்திய ராணுவம், பாகிஸ்தான், இந்திய விமானப்படை, போர் ஒத்திகை ஆகிய ஹேஷ்டேக்குகளும் டிரெண்டிங்கில் இருக்கின்றன.
#OperationSindoor: இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து மக்கள் தங்கள் பதிவுகள் மூலம் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் இதை பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கையாகக் கருதுகின்றனர். சிலர் இதனை, பாகிஸ்தான் உடனான போரை நோக்கிய ஒரு படியாகக் கருதுகின்றனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது.
பழிவாங்கும் ஆபரேஷன்
இந்திய ராணுவம் தமது எக்ஸ் தளத்தில் 'நீதி வழங்கப்பட்டது' என்று குறிப்பிட்டு, #PahalgamTerrorAttack என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பதிவிட்டுள்ளது. இதன் மூலம் இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையாக சுட்டிக்காட்டி உள்ளது.
போர் சூழல்
அதேசமயம், இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் பதற்றத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு இரு நாடுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளன.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, எக்ஸ் தளத்தில் கலவையான கருத்துகள் எழுந்து வருகின்றன. சிலர் இதை பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கடுமையான நடவடிக்கையாகக் கருதுகின்றனர். அதே நேரத்தில் சிலர் போரை நோக்கிய பயணம் என்றும், இதனால் பாதிப்பு அனைவருக்கும் தான் என்றும் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications