"இந்தியா" கூட்டணிக்கு திடீரென வந்த பிரச்சனை! 3 மாநிலங்களில் இடியாப்ப சிக்கல்! உண்மையில் என்ன மேட்டர்
டெல்லி: பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில், அதில் 3 மாநிலங்களில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணியான "இந்தியா" 2024 லோக்சபா தேர்தலுக்கான சீட் பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்கச் சமீபத்தில் முடிவு செய்தது. சீட் பங்கீடு விரைவாக முடிந்தால் தான் முழு வீச்சில் தேர்தலைக் குறிவைத்து பிரச்சாரம் செய்ய முடியும் என்பது அவர்கள் கணக்கு.

சமீபத்தில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் சீட் பங்கீடு தொடர்பாக ஒருமித்த கருத்தை எட்டுவதே இலக்காக இருந்தது. ஆனால் அது காங்கிரஸ் கட்சிக்கு அவ்வளவு ஈஸியாக இருக்கவில்லை. குறிப்பாக 3 மாநிலங்களில் ஒருமித்த கருத்தை எட்டவே முடியவில்லை.
பிரச்சினை: ஒரு பக்கம் பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இப்போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறியிருந்தார். அடுத்து மகாராஷ்டிராவில் மொத்தமே 48 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே உத்தவ் தாக்ரேவின் சிவசேனா 23 சீட்கள் கேட்டுள்ளதும் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. இந்த 3 மாநிலங்களில் என்ன பிரச்சினை என்பதைப் பார்க்கலாம்.
மேற்கு வங்கம்: 2024 லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று வியாழக்கிழமை மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்துப் பேசிய அவர், "நாடு முழுவதும் இந்திய அணி போட்டியிடும். அதேநேரம் வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவைத் தோற்கடிக்கும். ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள், எந்த கட்சியும் செய்ய முடியாததைச் செய்தது நாங்கள் தான். திரிணாமுல் தான் பாஜகவுக்குப் பாடம் புகட்டி இருந்தது" என்றார்.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 தொகுதிகள் இருக்கும் நிலையில், கடந்த 2019 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட திரிணாமுல் 22 தொகுதிகளில் வென்றது. அடுத்து பாஜக அதிகபட்சமாக 18 தொகுதிகளில் வென்ற நிலையில், காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வென்று இருந்தது.
மகாராஷ்டிரா:2024 மக்களவைத் தேர்தலில் என்பது காங்கிரஸுக்கு மட்டுமின்றி, இந்தியக் கூட்டணியில் உள்ள சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மற்றும் என்சிபி (சரத் பவார் பிரிவு) ஆகிய கட்சிகளுக்கும் அக்னிப் பரீட்சையாகவே இருக்கிறது. மகாராஷ்டிராவில் காங்கிரஸை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாத யாத்திரையைக் கூட எல்லாம் திட்டம் போட்டுள்ளது. இருப்பினும், தாக்ரேவின் சிவசேனா தரப்பு தங்களை நிரூபித்துக் கொள்ள வேண்டி இருப்பதால் 23 இடங்களைக் கேட்கிறது. ஆனால், காங்கிரஸ் அதை நிராகரித்துவிட்டது
23 இடங்கள் என்பது ரொம்பவே அதிகம் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஏனென்றால் அங்கே இருப்பதே மொத்தம் 48 இடங்கள் தான். சிவசேனாவுக்கு மட்டும் 23 இடங்களைத் தந்துவிட்டால், காங்கிரஸ் கட்சிக்கும் சரி, மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் தர முடியாது என்பதே அவர்கள் வாதம். இதனால் மகாராஷ்டிராவும் இழுபறியில் இருக்கிறது.
தலைமை இல்லை.. "இந்தியா" கூட்டணி லோக்சபா தேர்தலில் இதைத்தான் செய்யும்.. மம்தா பானர்ஜி அதிரடி
பஞ்சாப்: அடுத்து பஞ்சாப். அங்கே இப்போது பிரதான கட்சிகளாக இருப்பது ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் தான். பாஜக அங்கே போட்டியிலேயே இல்லை. இதனால் ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கூட்டணி அமைக்க யோசிக்கிறது. இதன் காரணமாகவே ஆம் ஆத்மி தனியாகப் போட்டியிடும் என்று பஞ்சாப் ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இது குறித்து சமீபத்தில் கூட்டம் நடந்த போதிலும் அதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
தேசயளவில் "இந்தியா" கூட்டணி உருவாகியுள்ள போதிலும், இந்த 3 மாநிலங்களில் சீட் ஷேரிங்கில் ஒரு முடிவு கிடைக்கவில்லை. இந்த 3 மாநிலங்களில் என்ன நடக்கும் என்பதை நாம் பொறுத்த தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications