Delimitation: எனக்கு நல்ல பெயர் கிடைக்கக் கூடாதுன்னா மசோதாவை எதிர்க்கட்சிகள் ஆதரிங்க! மோடி கலகல!
டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் எங்களுக்கு மட்டும் நல்ல பெயர் கிடைக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் நினைத்தால் அதை ஆதரிக்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை, யூனியன் பிரதேச சட்டம் என 3 மசோதாக்கள் மக்களவையில் காலை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாக்கள் மீது 12 மணி நேரம் வரை விவாதம் நடத்தப்படும் என்றும் நாளை 4 மணி வரை மசோதாக்களுக்கான வாக்குகளை அளிக்கலாம் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார்.

தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றுவது குறித்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தொகுதி மறுவரையறையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார். ஒரு சிலரால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார். தொகுதி மறுவரையறை குறித்து தென்னிந்தியாவில் தவறான தகவலை சில கட்சிகள் பரப்புகின்றன. எனவே தென்னிந்திய மக்களை தவறாக வழி நடத்த வேண்டாம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் இந்த மசோதாவை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், 21-ஆம் நூற்றாண்டில், இந்தியா ஒரு புதிய தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. இன்று உலக அரங்கில் இந்தியாவிற்கு இருக்கும் அங்கீகாரத்தை நாம் அனைவரும் உணர்கிறோம். இது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய தருணம்.
'வளர்ச்சியடைந்த பாரதம்' (Viksit Bharat) என்பது வெறும் ரயில்வே, சாலைகள், உள்கட்டமைப்பு அல்லது பொருளாதாரம் சார்ந்த புள்ளிவிவரங்கள் மட்டுமே கிடையாது என்று நான் நம்புகிறேன். 'வளர்ச்சியடைந்த பாரதம்' குறித்த இவ்வளவு குறுகிய பார்வை கொண்டவர்கள் நாம் அல்ல. கொள்கை முடிவெடுப்பதில் 'சப்கா சாத், சப்கா விகாஸ்' (அனைவருடன் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி) என்ற மந்திரம் உண்மையாகவே பிரதிபலிக்கக் கூடிய ஒரு 'வளர்ச்சியடைந்த பாரதத்தையே' நாம் விரும்புகிறோம். நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதமாக இருக்கும் பெண்கள், கொள்கை முடிவெடுப்பதில் ஒரு அங்கமாக மாற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்கனவே மூன்று தசாப்தங்கள் தாமதமாகிவிட்ட நிலையில், இனியும் தாமதிப்பது நாட்டு மக்களுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இழப்பாக அமையும்.
இந்தத் திட்டத்தின் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும், நாட்டின் நலனே முக்கியம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைக்கு உரிமை கொண்டாடுவதில் தமக்கு எந்தப் போட்டியும் இல்லை என்று தெரிவித்த அவர், இதற்கான நற்பெயரை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும், தேவைப்பட்டால் அதற்கான "பிளாங்க் செக்" கொடுக்கவும் தாம் தயார்.
மகளிர் மசோதாவுக்கு எதிர்த்தவர்களை இந்த நாட்டு பெண்கள் மன்னிக்கவில்லை. தர்மேந்திர ஜி, நீங்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டமைக்கு நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அகிலேஷ் எனது நண்பர்; சில நேரங்களில் அவர் எனக்கு உதவுகிறார். நான் மிகவும் பின்தங்கிய சமூகத்திலிருந்து வந்தவன் என்பது உண்மைதான், ஆனால் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் என்னுடன் அழைத்துச் செல்வதே எனது பொறுப்பாகும்.
இந்த மசோதாக்கள் எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சிக்கும் ஆதாயம் அளிக்காது. நீங்கள் என்னை எதிர்த்தால், எனக்குத்தான் அரசியல் ஆதாயம் கிடைக்கும்; ஆனால் நீங்கள் எங்களை ஆதரித்தால், எவருக்கும் (தனிப்பட்ட முறையில்) ஆதாயம் கிடைக்காது," என்று தெரிவித்தார்.














Click it and Unblock the Notifications