வாக்குப்பதிவு எந்திரம் மேல் நம்பிக்கை இல்லை..தேர்தல் ஆணையரிடம் எதிர்க்கட்சிகள் புகார் அளிக்க முடிவு
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து புகார் அளிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்து இருக்கிறது.
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து புகார் அளிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்து இருக்கிறது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையரிடம் வரும் திங்கள் கிழமை புகார் அளிக்க இருக்கிறார்கள்.
இன்று டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி சார்பாக இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இன்று பட்ஜெட் கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டமும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
காங்கிரஸ், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி, தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம்ஆத்மி, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது. சில சிறிய கட்சிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது.
லோக்சபா தேர்தல் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதேபோல் பட்ஜெட் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் இந்த பட்ஜெட் அறிவிப்புகள் என்ன மாதிரியான முடிவுகளை கொண்டு வரும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.
இதற்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். எதிர்கட்சித் தலைவர்கள் பலர் இந்த செய்தியாளர் சந்திப்பில் உடன் இருந்தனர்.
ராகுல் காந்தி தனது பேட்டியில், எதிர்கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையரை சந்திக்க முடிவு செய்து இருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து புகார் அளிக்க முடிவு செய்து இருக்கிறோம். திங்கள் கிழமை மாலை தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க இருக்கிறோம்.
மக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மேல் நம்பிக்கை இல்லை. பல அரசியல் தலைவர்களுக்கு இதன் மீதான நம்பிக்கை போய்விட்டது. இதனால் நாங்கள் இதுகுறித்து புகார் அளிக்க உள்ளோம். இது தொடர்பாக நாங்கள் சில ஆவணங்களை தயார் செய்து இருக்கிறோம்.
லோக்சபா பட்ஜெட் பல பொய்களை உள்ளடக்கி இருக்கிறது. இதில் பல தவறான தகவல்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. விவசாயிகளுக்கான எந்த திட்டமும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
இந்த பட்ஜெட் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். டிமானிடைசேஷன், ஜிஎஸ்டிக்கு அடுத்து மக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இந்த பட்ஜெட்தான் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.