நான் அப்போதே எச்சரித்தேன்.. கேட்கவில்லை.. பிரியங்கா காந்தியை மறைமுகமாக விமர்சித்த ப.சிதம்பரம்?
டெல்லி: உத்தரப் பிரதேச தேர்தல் படுதோல்வி தொடர்பாக காங்கிரஸ் மாநில பொறுப்பாளரும், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மறைமுகமாக விமர்சித்து உள்ளார்.
நடந்த முடிந்த 5 மாநிலத் தேர்தல் தொடர்பாக தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு ப.சிதம்பரம் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஏற்கனவே பலவீனமாக இருப்பதாகவும் அதற்கு காந்தி குடும்பத்தை மட்டும் குறை சொல்ல முடியாது என்றார்.

பிரியங்கா காந்தி செய்த தவறு
"உத்தரப்பிரதேச மக்களின் பொறுப்பாளர் ஒரே நேரத்தில் இரண்டு பணிகளை செய்ய முயன்றார். ஒன்று காங்கிரஸ் கட்சியை உத்தரப்பிரதேசத்தில் மறுகட்டமைப்பு செய்வது. மற்றொன்று சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டது. முதலில் கட்சியை மறு கட்டமைப்பு செய்து இருக்க வேண்டும். அதன் பிறகு தேர்தல் பணிகளை பார்த்து இருக்க வேண்டும்.

கட்சியில் பலவீனங்கள் உள்ளன
துரதிருஷ்டவசமாக இரண்டு பணிகளையும் ஒரே நேரத்தில் கட்சித் தலைமை செய்துள்ளது. ஒரே நேரத்தில் கட்சி மறுக்கட்டமைப்பு பணிகளையும், தேர்தல் பணிகளையும் செய்ய வேண்டாம் என நான் அப்போதே எச்சரித்தேன். காங்கிரஸ் கட்சியில் கடுமையான குறைபாடுகள் உள்ளன. அதை கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்ற தலைவர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். அந்த பலவீனங்களை சரி செய்ய வேண்டும்." என்றார்.

கட்சியை பிளவுபடுத்திவிடாதீர்கள்
குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட அதிருப்தி தலைவர்கள் ஜி 23 என்ற பெயரில் செயல்பட்டு வரும் நிலையில், அவர்கள் கட்சியை உடைத்துவிடக் கூடாது என்று ப.சிதம்பரம் வலியுறுத்தி இருக்கிறார். "அவர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், அவரவர் தொகுதிக்கு சென்று. கட்சியை வளர்க்கும் பணிகளை மேற்கொள்ளுங்கள். கட்சியின் ஒவ்வொரு பிரிவுகளையும் மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்."

கோவா தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பு
கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக தான் செயல்பட்ட நிலையில், கட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்து இருப்பது குறித்து குறித்து பேசிய ப.சிதம்பரம், "கோவா தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்றுக்கொள்கிறேன். தேர்தல் தோல்விகளுக்கு காந்தி குடும்பத்தினர் பொறுப்பேற்க வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு அந்தந்த தேர்தல் பொறுப்பாளர்கள் இதை செய்துள்ளனர்.

தலைமையை மட்டும் குறை சொல்லக்கூடாது
யாரும் தங்களின் பொறுப்புகளை தட்டிக்கழிக்கவில்லை. இங்கு அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இங்கு மண்டல அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியில் இருக்கும் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. எனவே அனைத்துக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமைதான் காரணம் என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது." என்றார்.












Click it and Unblock the Notifications