தேர்தல் தோல்விக்கு சோனியா குடும்பம் மட்டுமே பொறுப்பு அல்ல-அதிருப்தி தலைவர்களுக்கு ப.சிதம்பரம் பதிலடி
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் தோல்விகளுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடும்பம் மட்டுமே பொறுப்பு அல்ல என்று அதிருப்தி கோஷ்டியினருக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக என்.டி.டிவிக்கு ப.சிதம்பரம் அளித்த பேட்டி: காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பதவி விலகுவதாக தெரிவித்தனர். ஆனால் செயற்குழு அதனை ஏற்கவில்லை. இப்போதைய நிலையில் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும். ஆகஸ்ட் மாதம் கட்சித் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. அதுவரையில் சோனியா காந்தியின் இடைக்கால தலைமையை ஏற்று செயல்படுவதுதான் சரியாக இருக்கும்.

பொறுப்பு
காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல்களை முன்கூட்டியே நடத்தலாம் என சோனியா காந்தி தெரிவித்தார். ஆனால் பெரும்பாலான தலைவர்கள் அதை ஏற்கவில்லை. தேர்தல் தோல்விகளுக்கு சோனியா காந்தி குடும்பம்தான் பொறுப்பு என கூறுவதை ஏற்க முடியாது. கோவா தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். இதர தலைவர்கள் மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்பார்கள். யாரும் பொறுப்பேற்பதில் இருந்து நழுவ முடியாது. வட்டாரம், மாவட்டம், மாநிலம் என அனைத்து தரப்பும்தான் தேர்தல் தோல்விக்கு பொறுப்பானவர்கள்.

காங். பிளவு படாது
காங்கிரஸ் தலைமையை மாற்ற வேண்டும் என்கிறார்கள். ஆகஸ்ட் மாதத்துக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த இடைப்பட்ட காலத்துக்கு ஒரு இடைக்காலதலைவர் தேவை என்கிறார்களா அதிருப்தியாளர்கள். அதிருப்தி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை பிளவுபடுத்தாமல் இருக்க வேண்டும். அனைவரும் தங்களது தொகுதிகளுக்கு சென்று கட்சியை கட்டமைக்க வேண்டும். காங்கிரஸில் பிளவு ஏற்படாது என்றே நம்புகிறேன்.

2024 தேர்தலுக்கான வியூகம்
2024 லோக்சபா தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. பாஜகவை தேர்தலில் வீழ்த்த சில விட்டுக் கொடுப்புகளுக்கும் தயாராக வேண்டும். இது மமதா பானர்ஜிக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பொருந்தும். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தலைமையில் போராட வேன்டும். இப்படி ஒவ்வொரு மாநிலமாக பாஜகவுக்கு எதிரான களம் அமைத்தால் நம்மால் பாஜகவை தோற்கடிக்க முடியும்.

கட்சி கட்டமைப்பு
பல மாநிலங்களில் கட்சியே இல்லாமல் இருக்கிறது. வட்டார அளவிலான கட்சி கட்டமைப்பை களைத்துவிட்டு புதியதாக நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் பல ஆண்டுகளாக செயல்பாடுகளே இல்லை. இதுபோன்ற மாநிலங்களில் கட்சியை வலிமைப்படுத்தி பின்னர் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.












Click it and Unblock the Notifications