வீர மரணமடைந்த தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விருது.. குடியரசு தலைவரிடம் பெற்றுக் கொண்ட மகள்கள்
டெல்லி : குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து அவரது இரு மகள்கள் பெற்றுக்கொண்டனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும்.
இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி அறிவித்தது.

உயரிய பத்ம விருதுகள்
இந்நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மத்திய அரசு இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் குறித்த பட்டியலை கடந்த ஜனவரி மாதம் 2வது வாரத்தில் வெளியிட்டது. இந்தாண்டு 128 பேருக்கு பத்ம விருதுக்கு தேர்வு பெற்றுள்ளதாகவும், அதில் 4 பேருக்கு பத்மவிபூஷண் விருதும், பத்ம பூஷண் விருதுக்கு 17 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 107 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அதில் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலியான நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியான பிபின் ராவத்துக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மத்திய அறிவிப்பு
மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்,மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லா, கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.மேலும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், பிரபா அத்ரே, ராதேஷ்யம் கேம்கா, கல்யாண் சிங் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படும் என கூறப்பட்டது.

விருது வழங்கும் விழா
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட அறிக்கையில், ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாவில், குடியரசுத்தலைவர் 2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 54 பத்மஸ்ரீ விருதுகளை வழங்குவார் என்றும் மற்ற விருதுகள் வருகிற 28ஆம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விருதை பெற்ற மகள்கள்
இதனையடுத்து இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து அவரது இரு மகள்களான கிருத்திகா மற்றும் தாரிணி பத்மவிபூஷன் விருதினை பெற்றுக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications