லாக்டவுனால் வேலை இல்லை.. பசியில் குழந்தைகள்.. செல்போன் விற்று அரிசி வாங்கி கொடுத்த பெயிண்டர் தற்கொலை
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் லாக்டவுன் ஆகியவற்றின் காரணமாக, இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுக்க வர்த்தகம், உற்பத்தி போன்றவை பாதிக்கப்பட்டு உள்ளன. இது பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடியை ஏற்படுத்தியுள்ளது.
பணக்காரர்கள் தங்கள் சொத்து மதிப்புகளை இழந்து வருகிறார்கள். நடுத்தர குடும்பத்தினர் அடுத்த மாத சம்பளம் வருமா என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஏழைகள் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான ஒரு அதிர்ச்சி தற்கொலை, டெல்லிக்கு அருகேயுள்ள, ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் நடந்துள்ளது.

பெயிண்டர்
அவர் பெயர் முகேஷ். 30 வயது மதிக்கத்தக்கவர். 2 மாதங்கள் முன்பு வரை பெயிண்டர் வேலை பார்த்து, மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுக்கு வாழ்வளித்து வந்தவர். ஆனால் இப்போது அவர் தனது வாழ்க்கையை தானே முடித்துக் கொண்டுள்ளார். இரண்டு மாதமாக வேலை கிடையாது, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில், குழந்தைகள் அழுவதை பார்த்துக்கொண்டு அவரால் இருக்க முடியவில்லை. ஏப்ரல் மாத வெப்பம் ஒரு பக்கம். பசி மற்றொரு பக்கம். குழந்தைகள் துடித்துப் போயிருந்தனர். அவர் மனைவியும் தான்.

செல்போன் விற்பனை
பார்த்து, பார்த்து ரத்த கண்ணீர் வடித்த முகேஷ், எப்படியோ ஒருவரிடம் தன்னுடைய மொபைல் போனை 2500 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அதில் கிடைத்த பணத்தை வைத்து, மாவு, அரிசி, சர்க்கரை போன்றவற்றை வாங்கி, அதை தனது மனைவிடம் கொடுத்துள்ளார். குழந்தைகள் வெயிலில் கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல், போன் விற்ற காசில், ஒரு ஃபேன் வாங்கி, அதையும் மனைவியிடம் கொடுத்துள்ளார்.

தூக்கு
வீட்டுக்கு உள்ளே போன முகேஷ், தூக்கு மாட்டி தற்கொலை செய்துவிட்டார். அரிசி கிடைத்த சந்தோஷத்தில் இருந்த அந்த குடும்பத்தின் பிஞ்சு குழந்தைகள் உட்பட அத்தனை பேரும், முகேஷ் பரிதாபமாக இறந்து கிடந்ததை பார்த்து அழுது புலம்ப தொடங்கினர். முகேஷ் இறுதிச்சடங்கு செய்வதற்கு கூட பணம் இல்லாத நிலையில், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காசு போட்டு அதை செய்துள்ளனர்.

பணம்
இதுபற்றி முகேஷ் மாமனார் உமேஷ் கூறுகையில், லாக்டவுன் காரணமாக பெயிண்டிங் வேலை இல்லாததால் வருமானம் இன்றி அவர் குடும்பம் தவித்தது. கையில் வைத்திருந்த சேமிப்புகள் காலியாகி விட்டதால், கடைசியாக குழந்தைகளும், மனைவியும் படும் கஷ்டத்தை பார்த்து கொள்ள முடியாமல், அவர் தற்கொலை செய்து விட்டார், என்று கூறியுள்ளார் அழுதபடியே.

மன நோயாளி என்கிறது போலீஸ்
அதேநேரம் போலீஸ் கமிஷனர் முகமது அகில், முகேஷ் மனநோயாளி என்றும், அடிக்கடி பணியாற்றாமல் வீட்டில்தான் இருந்தார், எனவே அவரது சாவுக்கு யாரும் பொறுப்பு கிடையாது என்றும் கூறியுள்ளார். ஆனால், அவரது குடும்ப உறுப்பினர்கள் இதை மறுக்கிறார்கள். முகேஷ் நல்ல மனநிலையில்தான் இருந்தார். வருமானத்துக்கு வழி இல்லாமல் அவர்தான் தற்கொலை செய்தார் என்று தெரிவித்துள்ளனர்.

உதவி அவசியம்
லாக்டவுன் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் நோயால் பலியாவோர் எண்ணிக்கையைவிட பசியால் பலியாவோர் எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அரசு கொடுக்கும் உதவிகள் போதாது என்பது ஒரு பக்கம், அனைவருக்கும் அந்த உதவி போகவில்லை என்பது மற்றொரு பக்கம். இதனால் இந்தியாவின் ஒவ்வொரு குடும்பமும் பெரும் பொருளாதார ஆபத்தை நோக்கி அஞ்சியபடி உள்ளன.












Click it and Unblock the Notifications