ஆதாரமே சோஷியல் மீடியா தானாம்! சர்வதேச மீடியாவில் மீண்டும் மீண்டும் அசிங்கப்படும் பாக். அமைச்சர்கள்
வாஷிங்டன்: ஆபரேஷன் சிந்தூரை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இந்த வெற்றியைப் பொறுக்க முடியாத பாகிஸ்தான் பொய்களைக் கட்டவிழ்த்துவிட்டு இருக்கிறது. சர்வதேச மீடியாக்களிலும் அந்நாட்டு அமைச்சர்கள் பொய்களை அள்ளி வீச முயல்கிறார்கள். இருப்பினும், அங்குக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தொடர்ந்து அசிங்கப்பட்டு வருகிறார்கள்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா, ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தியது. இதில் சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மிகத் துல்லியமாக நடந்த இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.

அவமானப்படும் பாகிஸ்தான் அமைச்சர்
இந்திய ராணுவத்தின் இந்த வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பொய்கள் மீது பொய்யாகப் பரப்ப முயன்று வருகிறது. சர்வதேச மீடியாக்களில் நேரடியாக அந்நாட்டின் அமைச்சர்களே பங்கேற்று உண்மையை மறைக்க முயல்கிறார்கள். ஆனால் சர்வதேச மீடியாக்கள் கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் பாகிஸ்தான் அமைச்சர்கள் அவமானப்படுவது தொடர்கதையாகவே மாறிவிட்டது. அப்படித் தான் இந்தியா குறித்து தவறான தகவல் பரப்பி அமெரிக்க மீடியாவில் லைவ் ஷோவில் அசிங்கப்பட்டுள்ளார் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்கு பின் நேற்று, பிரபல அமெரிக்க ஊடகமான சிஎன்என் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்தார். இந்த நிகழ்ச்சி லைவாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது ஆபரேஷன் சிந்தூரில் இந்தியப் போர் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியதாகப் பொய்களை அள்ளி வீச ஆசிப் முயன்றார். ஆனால், அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் அதற்கு ஆதாரம் கேட்டார்.
சோஷியல் மீடியா தான் ஆதாரமாம்
அப்போது ஆசிப் எந்தவொரு ஆதாரத்தையும் தரவில்லை.. மாறாக அவர், "நீங்க சோஷியல் மீடியாவை பார்க்கலையா.. சோஷியல் மீடியா முழுக்க இது பத்தி தானே இருக்கு.. அதை பாருங்க" என்று சொல்லியிருக்கிறார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர், "இங்கே சோஷியல் மீடியாவில் பரவும் கதைகளைப் பற்றி எல்லாம் நான் கேட்கவில்லை. உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா என்றே கேட்கிறேன். உதாரணத்திற்கு நீங்கள் சீன ஏவுகணையை பயன்படுத்தினார்களா? என்ன ஆயுதம் யூஸ் செய்தீர்கள்" என்று கேட்டார்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஆசிப் முகத்தில் ஈ ஆடவில்லை. பாகிஸ்தான் தாக்கியதாகச் சொல்லும் அவர், எந்த ஜெட் விமானத்தை பயன்படுத்தியது என்பதைக் கூடச் சொல்ல முடியாமல் திணறினார். இதிலும் அவர் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. லைவ் ஷோவில் அசிங்கப்பட்ட அமைச்சர் ஆசிப், இந்த மோதல் போராக மாறவும் வாய்ப்பு இருக்கு.. அது இது எனச் சொல்லிச் சமாளித்தார்.
முதல்முறை இல்லை
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆசிப் லைவ் ஷோவில் இதுபோல உளறிக் கொட்டுவது இது முதல்முறை இல்லை. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுபோல பிரிட்டன் செய்தி நிறுவனமான ஸ்கை நியூஸிற்கு அளித்த பேட்டியில், தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்து வந்ததை அவர் ஒப்புக் கொண்டார். கடந்த 30 ஆண்டுகளாக மோசமான செயல்களைச் செய்து வந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஆசிப், அது தவறுதான் என்றும் இதனால் இப்போது அவதிப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார்.
தொடர்ந்து அசிங்கப்படும் பாகிஸ்தான் அமைச்சர்கள்
மேலும், இவர் மட்டுமில்லை.. பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார் என்பவரும் சமீபத்தில் ஸ்கை நியூஸில் பொய் சொல்லி மாட்டிக்கொண்டார். அதாவது பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களே இல்லை என்றும் இந்தியா மக்கள் பயன்படுத்தும் இடங்கள் மீதே தாக்குதல் நடத்தியதாக அவர் கூறியிருந்தார். மேலும், பாகிஸ்தானில் எந்தக் காலத்திலும் தீவிரவாத முகாம்கள் இருந்ததே இல்லை என்றார்.
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் பாதுகாப்பு அமைச்சர் ஆசிப்பே 30 ஆண்டுகளாகத் தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருந்ததாகச் சொன்னாரே.. நீங்கள் ஏன் மாற்றி சொல்கிறீர்கள் எனக் கேட்டார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் தரார், நேரலையில் ஏதேதோ உளறிச் சமாளித்திருந்தார்.
இந்தியாவுக்கு எதிராகச் சர்வதேச ஊடகங்களில் பொய் தகவல்களைப் பரப்ப முயலும் பாகிஸ்தான் அமைச்சர்கள், லைவ் ஷோவில் இதுபோல அசிங்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.












Click it and Unblock the Notifications