செம! சோனியாவை தேடிச்சென்று பேசிய பிரதமர் மோடி! சந்திப்பில் என்ன நடந்தது? லோக்சபாவில் சுவாரசியம்!
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி, சோனியா காந்தியை தேடிச்சென்று திடீரென பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் அவர்கள் 2 பேரும் பேசியது என்ன? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறையை கையில் எடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மணிப்பூரில் வன்முறைக்கு இடையே 2 பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டரை மாதமாக வன்முறை நடந்து வரும் நிலையில் அதுபற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் தனியாக விளக்கம் அளிப்பார். இன்னொரு நாளில் மணிப்பூர் வன்முறை பற்றி விவாதம் நடத்தலாம் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார். ஆனால் அதனை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மழைக்கால தொடரின் முதல் நாள் கூட்டம் இன்று முற்றிலுமாக முடங்கியது.
முன்னதாக இன்று காலை நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி மக்களவைக்கு வந்தார். அப்போது அவர் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட எம்பிக்களுக்கு வணக்கம் தெரிவித்தார். இந்த வேளையில் எதிர்க்கட்சிகளின் வரிசையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அமர்ந்திருந்தார்.
திடீரென சோனியா காந்தியின் அருகே சென்ற பிரதமர் மோடி அவரிடம் சிறிது நேரம் பேச்சு கொடுத்தார். இதனை யாரும் எதிர்பார்க்காத நிலையில் பிரதமர் மோடியின் இந்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதனால் அனைவரின் பார்வையும் பிரதமர் மோடி, சோனியா காந்தியின் பக்கம் திரும்பியது.
இந்த வேளையில் பிரதமர் மோடி, சோனியா காந்தியிடம் அவரது உடல்நலம் பற்றி விசாரித்தார். அப்போது, சோனியா காந்தி, ‛‛நான் நலமாக இருக்கிறேன்' என பதிலளித்தார். சோனியா காந்தி அவ்வப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகிறார். மேலும் பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை முடித்து சோனியா காந்தி பயணித்த தனிவிமானம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் அந்த விமானம் அவசரமாக மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தரையிறக்கப்பட்டது. இந்த வேளையில் அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் மாஸ்க்கை சோனியா காந்தி அணிந்திருந்தார். இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தான் பிரதமர் மோடி இன்று சோனியா காந்தியிடம் நலம் விசாரித்தார்.
அதன்பிறகு பிரதமர் மோடி அங்கிருந்து தனது இருக்கைக்கு சென்றார். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக பிரதமர் மோடி, சோனியா காந்தி ஆகியோர் உள்ளனர். இத்தகைய சூழலில் இந்த சந்திப்பு மக்களவையில் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications